சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மரியாதை செலுத்திய துணை கமிஷனர்
விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிய போலீசாரை துணை கமிஷனர் பாராட்டி மரியாதை செய்தார்.
HIGHLIGHTS
ஆண்டு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு துணை கமிஷனர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு பண்டிகை வரும்போதும் காவலர்கள் விடுமுறை எடுக்காமல் முழுநேரம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவ்வாறு பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை கவுரவிக்கும் விதமாக புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட எம்கேபி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் கலந்து கொண்டனர். அப்போது ஆண்டு முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய போலீசாருக்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் சால்வையணிவித்து அவர்களைப் பாராட்டினார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து காவலர்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டு அவர்களுக்கு டைரி வழங்கப்பட்டது. அப்போது அவர்களிடம் பேசிய துணை கமிஷனர் ஈஸ்வரன்,
'புளியந்தோப்பு சரகத்தில் குற்ற செயல்கள் முற்றிலும் தடுக்கும் விதமாக ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். சைக்கிள் ரோந்து பணிகளில் செல்பவர்கள் பாதுகாப்புடன் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் பொது இடங்களில் பொதுமக்கள் மதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.' இவ்வாறு அவர் பேசினார்.