வியாசர்பாடியில் செல்போன் கொள்ளையர்கள் கைது
சென்னை வியாசர்பாடி ஐந்தாவது பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 56. இவர் கடந்த 25ஆம் தேதி மாலை தனது காரில் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி டீசல் போடுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார். டீசல் போட்டுவிட்டு மீண்டும் வாகனத்தில் அமர்ந்து வண்டியை எடுத்தபோது வண்டியில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது ராஜேந்திரன் டீசல் போடும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்த் 22 மற்றும் கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்கின்ற சைக்கோ சஙகர் 22 ஆகிய 2 பேரையும் எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து இவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.