எந்த தேர்தல் நடந்தாலும் பணம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது: கிருஷ்ணசாமி
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அமைச்சர்கள் தங்களது முகாம்களை விட்டு வெளியேற வேண்டும்
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் வாக்காளர்களுக்கு பணம் அளித்தே வாக்குகளை பெறுகிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணாசாமிகுற்றச்சாட்டினார்.
சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இப்பொழுது அறிவிக்கபட்டுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பட்ட பகலிலேயே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும் பதவிகளை பகிரங்கமாக ஏலம் விடும் அவலம் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான வலு தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா என்பதே கேள்வி குறிதான்.
அமைச்சர்கள் இருக்கும் பணிகளை விட்டு விட்டு, உள்ளாட்சி தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க, மாவட்டங்கள் எங்கும் முகாமிட்டு இருப்பதை பார்க்கும் போது, இங்கு ஜனநாயகம் முளையிலேயே கிள்ளி எறியபட்டுள்ளது தெள்ள தெளிவாக தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்றால் அமைச்சர்கள் தங்களது முகாம்களை கலைத்து விட்டு சென்னைக்கு வந்து தங்களது பணிகளை கவனிக்க வேண்டும்..
இறுதியாக எவ்வளவோ போராடியும் தங்களது புதிய தமிழகம் கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்க படவில்லை. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அதிகமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 முதல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.