சென்னை வேலைவாய்ப்பு முகாமில் 262 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 262 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற தேசிய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நாடு முழுவதும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு நிலைகளில் ரயில் மேலாளர், நிலைய மேலாளர், முதுநிலை வர்த்தக மற்றும் பயணச்சீட்டுப் பரிசோதகர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், சுருக்கெழுத்தர், இளநிலை கணக்காளர், தபால் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், வரி விதிப்பு உதவியாளர், திட்ட வடிவமைப்பாளர், இணைப் பொறியாளர் அல்லது மேற்பார்வையாளர், உதவிப் பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், பயிற்சி அதிகாரிகள், தனி உதவியாளர், பலதரப்பட்ட பணி உள்ளிட்ட பணிகளில் சேர உள்ளனர். பல்வேறு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள புதிய பணியாளர்கள் கர்மயோகி பரம் என்ற இணையதள வழியிலான பாடப்பிரிவு மூலம் அவர்கள் தாங்களாகவே பயிற்சியில் ஈடுபட முடியும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பணி நியமனக் கடிதங்கள் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜான் பர்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 262 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர், வேலைவாய்ப்பு முகாம் என்பது பிரதமரின் கனவுத் திட்டம் என்றும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 75-வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வேளையில், வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் தொடங்கி வைத்தார் என்று கூறிய அவர், பிரதமரின் உறுதிப்பாட்டை முழுமைபடுத்துவதற்கான முன்முயற்சி என்று தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் ஊக்கியாக விளங்குகின்றன என்று தெரிவித்தார். நமது நாடு உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் பொது மேலாளர் கௌஷல் கிஷோர், ரயில் பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளர் பி.ஜி.மால்யா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.