தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் விட்டு விட்டு மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. அடையாறு, மந்தைவெளி, வடபழனி, தி. நகர், அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாம்பரம், குன்றத்தூர், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.