முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர் அதிரடி
காய்கறி விற்பனை செய்பவர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறினார்
HIGHLIGHTS
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் தடுக்கும் வண்ணம் வீடுகளுக்கே காய்கறி மற்றும் பழங்கள் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தினசரி 18 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 4,380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கு சென்று காய்கறி மற்றும் பழங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழக அரசின் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் சென்னை கோயம்பேட்டில் தொடக்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காய்கறி விற்பனை செய்பவர்கள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்றும், வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.