/* */

ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு

5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்

HIGHLIGHTS

ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுமார் 6ஆயிரம் கோடிக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பை விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

2021 -ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், பத்தி 264-ல், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக தங்களது அனுமதியோடு, 110 விதியின் கீழ் நான் அறிவிப்பினை வெளியிட விரும்புகிறேன்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையின் மீது, கடந்த 25-8-2021 அன்று நடந்த விவாதத்தின் போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி, எவ்வாறு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 783 நபர்களுக்கு, 2 ஆயிரத்து 749 கோடியே 10 லட்சம் ரூபாய் தவறாகத் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்.

அந்த விவாதத்தின்போது, தொடர்ந்து பேசிய அமைச்சர், அவ்வாறான தவறுகள் நகைக் கடன்களிலும் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த வகையில் நடைபெற்றுள்ளன என்பதையும் விளக்கி, எனவே நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமான மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த அவையிலே தெரிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதனடிப் படையில், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன்.

இந்த நகைக் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்றகூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச்சேகரித்து, தொகுக்கப்பட்டு கணிணி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக் கடன்கள் வழங்கப்பட்டதிலும், பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகைக்கடன் தள்ளுபடி செய்கையில் சரியான, தகுதியான ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே, 5 பவுனுக்கும் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில் சில நேர்வுகளில் தள்ளுபடிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனக் கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 2021 -ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின் பேரில் கடன் பெற்றவர்கள்; தவறாக AAY (அந்தியோதயா அன்ன யோஜன ) குடும்ப அட்டையைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நகைக் கடன் பெற்றவர்கள் மற்றும் இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது. இதுகுறித்த விவரமான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும்.

இந்த நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளிவந்தவுடன், முறையற்ற வகையில் தள்ளுபடி பெறவேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு, நகைக் கடன்களைப் பெற்றிருப்பதும், குறிப்பாக, சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின்மீது தகுந்த நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.

மேற்கூறியவாறு தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுறவு நிறுவனங்கள் இனி நேர்மையாக, திறமையாக, ஏழை எளிய விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன் பெறும் வகையில் செயல்படதேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான கணினிமயமாக்கம், Core Banking போன்ற நவீன வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்கள் முறையாகக்கண்காணிக்கப்பட்டு, எதிர்காலத்தில் சிறப்பாக நடத்திச் செல்லப்படும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

Updated On: 13 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு