Begin typing your search above and press return to search.
கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய ரவுடி கைது
சேலையூரில் கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம், பஜனை கோயில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், மகேஷ்(41), இவர்,‛அன்னை அருள்' திருமண மண்டபத்தின் உரிமையாளர், ஜோசப் செல்வகுமார்(48), என்பவரிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் 22ம் தேதி, மாடம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்காக, ‛காரில், ஜோசப் செல்வகுமார், தன் நண்பர் காசிநாதன் என்பவருடன், வந்து கொண்டிருந்தார் ; காரை, மகேஷ் ஓட்டி வந்தார்.
பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த, 'ஸ்கோடா' கார் மீது, ஜோசப் செல்வகுமாரின் கார் எதிர்பாராதவிதமாக உரசியது. இது தொடர்பாக, இருதரப்பிற்கும் இடையே, வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதனால், ஜோசப் செல்வகுமார் போலீசில், புகார் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, ‛ஸ்கோடா' காரில் வந்த, எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவர், கத்தியால் ஜோசப் செல்வகுமாரின் கார் கண்ணாடிகளை, அடித்து நொறுக்கிவிட்டு தப்பினார்.
இது குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டவர், ஓட்டேரியைச் சேர்ந்த, கார்த்திக்(30), என, தெரிந்தது ; போலீசார் அவரை கைது செய்தனர்.
கார்த்திக் மீது, கொலை முயற்சி உட்பட, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.