Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு அருகே ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை - பரபரப்பு
செங்கல்பட்டு அருகே ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட முருகேசனார் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் விக்கி (எ) விக்னேஷ். இவர் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். வழக்கு ஒன்றில் ஆஜராக, செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்த விக்னேஷ், ஒழலூர் பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
நேற்றிரவு, விக்னேஷுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசுவதற்காக, வீட்டை விட்டு வெளியே வந்த விக்கியை, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூக்குரலிட்டு அலறி துடித்துள்ளனர். மேலும், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான விக்னேஷுக்கும், செங்கல்பட்டை சேர்ந்த அன்வர் என்பவருக்கும் அப்பகுதியில் யார் பெரிய ஆள் என்பதில் போட்டி நிலவியுள்ளது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.