/* */

பாரதியார் வாழ்க்கை வரலாறு தமிழில்..

Mahakavi Bharathiyar History in Tamil-மகாகவி, மீசைக்கவிஞன் பாரதியின் வரலாறு தமிழில் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாரதியார் வாழ்க்கை வரலாறு தமிழில்..
X

bharathiyar history in tamil- முண்டாசுக்கவி பாரதியார்.

Mahakavi Bharathiyar History in Tamil-நவீன தமிழ் கவிதைகளுக்கு தந்தை நமது மீசைக்கவி பாரதி. தமிழ், பெண் விடுதலை, தீண்டாமை போன்ற கருக்களை அடிப்படையாக கொண்டு ஒரு நூற்றண்டிற்கு முன்னரே இந்த சமூகத்தின் சிரசில் ஓங்கிக்குட்டியவன் பாரதி. மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளர்,சிறந்த பத்திரிக்கை ஆசிரியர்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பெண்ணுரிமைக்காக அக்காலத்திலேயே உரிமைக்குரல் எழுப்பியவன் பாரதி. "சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;" என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து சவுக்கடி கொடுத்தவரும் பாரதியே. தனது தீராத சுதந்திர வேட்கையின் கொந்தளிப்புகளை எழுத்துக்கள் மூலம் மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

பிறப்பு

மகாகவி பாரதியார் உண்மை பெயர் சுப்பையா (எ) சுப்பிரமணியன். பிறந்தது டிசம்பர் 11, 1882. பிறந்த இடம் எட்டயபுரம், அவருக்கான வேறு பெயர்கள் முண்டாசுக் கவிஞன், சக்தி தாசன், பாரதியார், மகாகவி போன்றவை. இருப்பிடம் திருவல்லிக்கேணி, சென்னை. அவரது பணி முழுநேரக் கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், பத்திரிக்கையாசிரியர். பெற்றோர் சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள். அவரது துணைவியார் பெயர் செல்லம்மாள். பிள்ளைகள் தங்கம்மாள், சகுந்தலா ஆகிய இரண்டு பெண்கள்.முக்கிய படைப்புகள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு. பாஞ்சாலி சபதம் உட்பட பல கவிதைகள். சமயம்: இந்து. இறப்பு: செப்டம்பர் 11, 1921. பாரதியார் பிறப்பு மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும், 1882 ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ம் தேதி , திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோரோர் இட்ட பெயர் சுப்பிரமணி.

இளமை பருவம் :

5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதை எழுத தொடங்கிவிட்டார். 11 வயது இருக்கும்போது சுப்பிரமணியின் கவிதை பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி 'பாரதி' என்ற பட்டத்தை எட்டயபுர மன்னர் வழங்கினார். அன்றில் இருந்து அவரது பெயர் சுப்பிரமணிய பாரதி என்றானது.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ஆம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்களோடும் பண்டிதர்களோடும் சொற்போரில் ஈடுபடும் ஆற்றல் பெற்றிருந்தார். அதனால் அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது. அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர் இவரின் புலமையை கண்டு வியந்தனர்.

பாரதியார் திருமண வாழ்க்கை :

1897ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி பாரதிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு திருமணம் நடந்தது. குழந்தை திருமணம். இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார். அதனால் குழந்தை திருமணங்களை எதிர்த்து பொங்கி எழுந்தார்.

பழமொழிகள் பேசும் வித்தகர்:

பாரதியார் 16 மொழிகள் கற்றவர். 16 வயதிலேயே தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன் பிறகு வறுமையில் விழுந்தார். பின்னர் கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார். இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார், பாரதி. இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தெளிவாக சொன்னார்.

அவர் ஆற்றிய பணிகள் :

4 ஆண்டுகள் காசியில் இருந்த பாரதி தமிழகம் திரும்பினார். அந்தநேரம் எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் 1903ம் ஆண்டில் அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் சுதேச மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

விடுதைலை போராட்டத்தில் பாரதியார் :

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905ம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கினார். அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிதா தேவியை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்.

1907ம் ஆண்டில் "இந்தியா" என்னும் வார ஏட்டையும் "பால பாரதம்" என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். இந்தியா விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக இருந்தார். அவர் ஆசிரியராக இருந்த 'இந்தியா' என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ளச் செய்தது.

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்

என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி.

கைது வாரன்ட் :

பாரதியாரின் சுதந்திர எழுச்சி மிக்க பாடல்களும் கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்தை வழிநடத்த பெரிதும் கைகொடுத்தது. இதனால் "இந்தியா" பத்திரிகைக்கு தடைவிதித்த பிரிட்டிஷ் அரசு பாரதியாருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது.

பாரதி தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார்.1908ம் ஆண்டு முதல் "இந்தியா" பத்திரிக்கை புதுவையில் இருந்து வெளி வர துவங்கியது.

தன் எழுத்துக்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் பாரதியார். அவரது பத்திரிக்கை பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்தது. இதனை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த பத்திரிகையை படிக்க தடை விதித்தது. இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த "இந்தியா" பத்திரிகையும் பாதை அறியாது பாதியில் நின்றுபோனது.

புதுவையில் பாரதியாரின் கவிதை பத்திரிக்கை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கிப்போய்விடவில்லை. அந்த காலகட்டத்தில் தான், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் போன்ற அமர கவிதைகள் பலவற்றை இயற்றினார். அதோடு 1912 ம் ஆண்டு பகவத் கீதையை பெயர்த்து தமிழில் வெளியிட்டார்.

கைது செய்யப்பட பாரதியார் :

1918ம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது பாரதி செய்யப்பட்டார். 34 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையத்தில் குடியேறினார். இரண்டு ஆண்டுகள் கடயத்திலேயே இருந்தார்.

வறுமையில் உழன்ற பாரதியார் :

கடையத்தில் இருந்த காலகட்டத்தில் பாரதியாரை வறுமை ஆட்கொண்டது. தம் நிலையை விளக்கி ஒரு துண்டு சீட்டில் கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு அனுப்பினார்.ஆனால், மன்னரிடமிருந்தும் எதிர் பார்த்த உதவி கிடைக்கவில்லை. உலகில் எல்லா உயிரினங்களும் பசியில்லாமல் வாழவேண்டும் என்ற எண்ணம் பாரதியாரிடம் அந்த வறுமை காலத்திலும் மேலோங்கி இருந்தது. வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசியை கூட காக்கைக்கும் குருவிகளுக்கு வாரி இறைத்து விட்டு, தான் பசியோடு வாழ்ந்த நாட்கள் எத்தனையோ.

இத்தகையை உணர்வுள்ள ஒருவரால் தான், "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று கவி பாட முடியும். Mahakavi Bharathiyar வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார். பொதுவாக கொடுக்கிற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் நம் தேசிய கவி.

ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர், தட்டில் பணத்தையும் பட்டாடையையும் வைத்து பாரதியாரிடம் கொடுத்தாராம். ஆனால் பாரதியோ, தட்டை உம்மிடமே வைத்துக்கொள் என்று கூறி , தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை எடுத்துக்கொண்டாராம். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்துவிட கூடாது என்பதில் கவனமாய் இருந்தார் என்பதற்கு இலக்கணம் அவரே.

காந்தி, பாரதியார் சந்திப்பு :

வறுமையில் கஷ்டப்பட்ட பாரதியார், 1919ம் ஆண்டில் மீண்டும் சென்னைக்கு வந்தார். ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது, அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகாகவி பாரதியார் சந்தித்துக்கொண்டது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பாரதியார் இறப்பு :

1921ம் ஆண்டு ஜூலை மாதம், வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக பார்த்தசாரதி கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால், அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும், வயிற்று கடுப்பு நோயால் மிகவும் பாதிக்கப்பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி 39வது வயதில்,இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Mahakavi Bharathiyar இளம் வயதில் இத்தகைய ஒரு பெரும் கவிஞர் இறந்தது ஒரு சோகம் என்றால், அதை விட பெரும் சோகம் ஒன்றை "கவிராஜன் கதை" என்னும் நூலில் கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மிகச் சிலரே என்பதை குறிப்பிடுகையில், "இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே. மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ! அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் இறந்தாலும் தன் கனவுகள் அனைத்தையும் நம்மிடமே விட்டு சென்றார் அந்த தீர்க்கதரிசி. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிய பாராதியை தீர்க்க தரிசி என்று தானே நாம் அவனுக்குச் செய்யும் கவிதாஞ்சலி.

பாரதியாரின் நூல்கள் :

பாஞ்சாலி சபதம், பாரதி அறுபத்தாறு, தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணிமாலை, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, தோத்திரப்பாடல்கள், ஞானப்பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, பதஞ்சலியோக சூத்திரம், சந்திரிகையின் கதை, ,விடுதலைப் பாடல்கள், சின்னஞ்சிறு கிளியே, பொன்வால் நரி, பாரதியார் பகவத் கீதை, ஞானரதம், நவதந்திரக் கதைகள், ஆறில் ஒரு பங்கு போன்றவை.

பாரதியாருக்கு நினைவுச் சின்னம்:

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில், அவருக்கு மணிமண்டபமும், திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த வீட்டினை, பாரதியார் நினைவு இல்லமாக மாற்றி, இன்றுவரை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அதோடு அங்கு பொதுமக்களும் சென்று பார்வையிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பாரதியைப் பார்த்துதான் 'பிரிக்க முடியாதது எது?" -'வறுமையும் புலமையும்' என்று உரைத்தார்களோ..?


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 7:20 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  3. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  4. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  5. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  6. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  8. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  9. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  10. ஈரோடு
    சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்.18) ஜாதி முல்லை கிலோ ரூ.500க்கு...