கோவையில் வினோதம்: கருவுற்ற பூனைகளுக்கு சீர்சடங்குகளுடன் வளைகாப்பு
கோவையில், சீர் வரிசையாக தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சீர்சடங்குகள் செய்யப்பட்டன.
HIGHLIGHTS
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த உமா மகேஸ்வரன் - சுபா தம்பதியினர். தங்களது வீட்டில் ஒரு ஆண் மற்றும் 2 ப்ரிஸியன் இன பூனைகளை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதில் ஜீரா மற்றும் ஐரிஸ் என பெயரிடப்பட்ட இரண்டு பெண் பூனைகள் கருவுற்றன. பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்றுபூனைகளுக்கு வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது.
இதில், பூனைகளுக்கு அலங்காரம் செய்து நெற்றியில் பொட்டு வைத்து, சீர் வரிசையாக தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப்பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சீர்வரிசை தின்பண்டங்களை பூனைகளுக்கு விருந்தாக அளிக்கப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வில் உமா மகேஸ்வரனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பூனைகளை வளர்க்கும் உமா மகேஸ்வரனின் மகள் ஸ்மித்தி கூறுகையில், கருவுற்ற இரண்டு பூனைகளையும் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல கவனித்து வருவதால், பூனைகளை மகிழ்விக்கும் விதமாக, இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதாக கூறினார். மேலும் சத்து மிகுந்த இறைச்சி மற்றும் உணவு வகைகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.