பாகுபலியானார் எடப்பாடி பழனிசாமி: கோவை அ.தி.மு.க.வினர் வைத்த கட்அவுட்
கோவை அ.தி.மு.க.வினர் பாகுபலியாக சித்தரித்து எடப்பாடி பழனிசாமிக்கு கட்அவுட் வைத்துள்ளனர்.
HIGHLIGHTS
பாகுபலி வேடத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்து அசத்தி உள்ளனர் கோவை அ.தி.மு.க.வினர்.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அ.தி.மு.க.வினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என மாறி மாறி வழக்குகள் நடந்து வந்தன. அ.தி.மு.க.வின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது. அதில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது செல்லும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஒரு கொண்டாட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. கட்சியின் நிறுவன தலைவரான எம்.ஜி.ஆரின்.தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிவித்து அழகு பார்த்தார் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அ.தி.மு.க.வினர் "தமிழக மக்களின் பாகுபலியே!! கழகப் பொதுச் செயலாளரே!!! தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்" என்ற வாசகங்களுடன் கட் அவுட்டை வைத்துள்ளனர். பாகுபலி வேடத்துடனும், கையில் வாளுடனும் நிற்பதை போன்று வடிவமைத்துள்ளனர். அதில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், ஜெயராமன் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளது.
பாகுபலி திரைப்படம் வசூலில் மட்டும் அல்ல மக்கள் மத்தியிலும் நிலைத்த இடம் பிடித்து சாதனை பெற்றது.அது போல் எடப்பாடி பழனிசாமியும் சாதனை படைக்கிறார் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த கட்அவுட் வைக்கப்பட்டதாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.