தா.பழூரில் வேலைவாய்ப்பு முகாம் - 45 நபருக்கு பணி ஆணை வழங்கல்
தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 168 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிஆணை வழங்கப்பட்டது
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியோர் இணைந்து வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்பு கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சிவகுமார் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இம்முகாமில் சென்னை, நாகை, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 168 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊரக வாழ்வாதார திட்ட வட்டார மேலாளர் ராமலிங்கம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், சுபாஷினி, மீனா, உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.