டாம்கோ லோன் மேளா: கடனுதவி பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு
தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன், கறவைமாடு, உயர் கல்வி பயில்வதற்கான கல்விகடன் பெறலாம்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு டாப்செட்கோ மற்றும் டாம்கோ கழங்கள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட தகவல்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன், கறவைமாடு வாங்க கடனுதவி பெறவிரும்புவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான கல்விகடன் பெறவிரும்புவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், தென்னூர் கிராமத்தில் தென்னூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 27.09.2021 அன்றும், செந்துறை வட்டம், மணபத்தூர் கிராமத்தில் மணபத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 28.09.2021 அன்றும், அரியலூர் வட்டம் கீழப்பழூர் கிராமத்தில் கீழப்பழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 29.09.2021 அன்றும், உடையார்பாளையம் வட்டம், உடையார்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 30.09.2021 அன்றும், காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000/- உட்பட்டும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/- உள்பட்டும் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டைநகல், சாதிச் சான்றிதழ், பள்ளிமாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்டமத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயனடையலாம்.