அரியலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அரியலூர் அருகே மேலப்பழுவூரில் உள்ள கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷுக்கு 42 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில் செயல்படும் கல்குவாரியில், பூமிக்கடியில் இருக்கும் கருங்கல்லை வெடி வைத்து தகர்த்து, ஜல்லி ஆக்கும் பணி நடைபெறுகிறது. புதிதாக அமைக்கப்படும் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இந்த ஜல்லிகற்கள் இங்கிருந்து அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பூமிக்கடியில் வெடி வைத்து கருங்கல்லை உடைக்கும்போது ஏற்படும் நில அதிர்வுகளால் பெரிதும் கிராமத்தில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், வீடுகளில் அதிர்வுகள் உண்டாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனையடுத்து இந்த கல்குவாரியை மூடவேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களை சமாதனப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.