அரியலூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் திறப்பு
அரியலூரில் புதிய கால்நடை கட்டிடத்தை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து புலனாய்வு பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
HIGHLIGHTS
அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டடத்தினை திறந்து வைத்து, புதிய கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடம் மற்றும் ஆய்வகத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (24.06.2022) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ சேவைகள் சிறப்பாக பொதுமக்களை சென்றடையும் வகையில் கால்நடை மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள 1,64,000 மாட்டினங்கள், 2,50,000 ஆட்டினங்கள் மற்றும் இதர செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோயினை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடம் மற்றும் ஆய்வகம் கட்டுமானப் பணிகளுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, மண்டல இணை இயக்குநர் (கால்நடைப்பராமரிப்புத்துறை) மரு.ஹமீதுஅலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், மலர்மன்னன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.