அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு, முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
HIGHLIGHTS
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில், அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தாமரைக்குளம் ஊராட்சி தலைவர் பிரேம்குமார், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற புதிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று அரியலூரில் உள்ள 18 வார்டுகளிலும், அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.