உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை : கைதான நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்
HIGHLIGHTS
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவில் கிராமத்தில் கடந்த 2020 -ஆம் ஆண்டு செல்வமணி, சாமிநாதன் உள்ளிட்ட சிலர் மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் சாமிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செல்வமணியை வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சாமிநாதன் சொந்த கிராமத்திற்கு வராமல் சென்னையிலேயே தங்கி இருந்தாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த கிராமமான அனைக்குடம் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொலை செய்யப்பட்ட செல்வமணியின் தம்பி இளையராஜா உள்ளிட்ட சிலர் கூலிப்படையை வைத்து கடை வீதியிலேயே சாமிநாதனை வெட்டி படுகொலை செய்தனர். இக்கொலை குறித்து தா.பழூவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இக்கொலையில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம், திருநறையூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார், ஆகியோர் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவின் மனைவி ரெஜினா, செல்வகுமார், செல்வம், நவீன் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்பொழுது சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தது, பணம் கொடுத்தது, மற்றும் சாமிநாதன் யார் என அவரை அடையாளம் காட்டியது போன்ற குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 1 நீதிபதி அறிவு முன்பு ஆஜர்படுத்தினர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், போலீசார் அனைவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.