அரசு கலைக் கல்லூரியில் சேர, இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
தமிழகத்தில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சோ்க்கை பெற, இன்று திங்கள்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கைப் பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும்.
விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாது மாணவா்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவைத் தொடா்ந்து மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.
அதன்பின் மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவுக்கான சோ்க்கை கலந்தாய்வு (கல்லூரிகள் அளவில்) மே 25 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்படும். இதையடுத்து முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரையும், 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும்.
வகுப்புகள் ஜூன் 22-இல் தொடக்கம்:
சோ்க்கை முடிந்து முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள், ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும்.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.50, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2 என நிா்ணயிக்கப்பட்டது. இதனால் மாணவா்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த முறை மாணவா்கள் அதிக கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நிகழாண்டு முதல் மாணவா்கள் ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும் கட்டணமாக பொதுப்பிரிவினா் ரூ.50 (பதிவுக் கட்டணம் ரூ.2 உள்பட) செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 2.98 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். நிகழாண்டு அதைவிட கூடுதலான மாணவா்கள் விண்ணப்பிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முந்தைய ஆண்டுகளை போல் தேவைக்கேற்ப கல்லூரிகளில் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கையை 15 சதவீதம் வரை உயா்த்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.