பரமபதவாசல் திறப்பில் பரமபதம் அடைந்தார் ஆங்கில பத்திரிகை புகைப்பட கலைஞர்
சென்னை பார்த்தசாரதி கோவில் பரமபதவாசல் திறப்பினை புகைப்படம் எடுக்க சென்ற ஆங்கில பத்திரிகை புகைப்பட கலைஞர் மாரடைப்பினால் இறந்தார்.
HIGHLIGHTS
வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று அனைத்து முக்கியமான பெருமாள் கோவில்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவின் உச்ச நிகழ்ச்சியாக பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது மரபு. முந்தைய நாள் இரவு முழுவதும் கண்விழித்து மகாவிஷ்ணுவின் நாமங்களை உச்சரித்தபடி இருந்துவிட்டு அதிகாலை திறக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பில் பங்கேற்றால் இப்பிறவியில் முக்தி அடையலாம். இறைவனின் திருவடியை அடைய நேரடியாக சென்று விடலாம் என்று ஐதீகமாக நம்பப்படுகிறது.'
சென்னை பார்த்தசாரதி கோவில்
மாதங்களில் நான் மார்கழி என்றான் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணன். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான மார்கழி மாதத்தில் இந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து வருகிறது.தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்கு அடுத்தார் போல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலிலும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா அதனையொட்டி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இக்கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தரிசனம் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விமரிசையாக நடைபெற்றது.
மாரடைப்பால் மரணம்
இந்த விழாவில் பங்கேற்று பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்காக இந்து ஆங்கில பத்திரிகையின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி. சீனிவாசன் (வயது56) என்கிற சென்னாவும் சென்று இருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது புகைப்படம் எடுத்துவிட்டு அதனை வெளியிடுவதற்கான பணியில் இருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கே உயிரிழந்தார்.
சோகம்
இந்த சம்பவம் அங்கு இருந்த சக பத்திரிகையாளர்கள் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை மட்டுமல்ல விழாவில் பங்கேற்ற அனைவரிடமும் ஒரு விதமான சோகத்தையும் ஏற்படுத்தியது.இது ஒரு சோகமான நிகழ்வு தான் என்றாலும் அவர் இறைவனின் திருவடியை அடைந்து விட்டார் என ஐதீகமாக நம்பப்பப்படுகிறது.
பணியின் போது உயிரிழந்த அதுவும் இறைபணியின் போது உயிரிழந்த சென்னா என்கிற சீனிவாசன் மறைவிற்கு சக பத்திரிகையாளர்கள் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஆன்மீகவாதிகள் உட்பட அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
முதல்வர் இரங்கல்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும் தமிழக அரசின் சார்பில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கே. வி. சீனிவாசன் (வயது 56).இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழா வைபவம் நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
ரூ.5 லட்சம் நிதி உதவி
கே. வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே. வி. சீனிவாசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.