தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயினை கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை
தென்னை மரங்களைத் தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயினை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
தஞ்சாவூர் வாடல் நோயினை கட்டுப்படுத்திட வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தென்னை மரங்களை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும் வாடல் நோயினை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண் இணை இயக்குநர் (பொ) மெ. சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,968 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஜா புயலுக்கு பின் விவசாயிகள் கூடுதலாக 3.166 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். தென்னையினை தாக்கும் நோய்களில் அதிக சேதம் விளைவிக்க கூடியது வாடல் நோயாகும். எனவே விவசாயிகள் தென்னையினை தாக்கும் வாடல் நோயினை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள் : வாடல் நோயின் ஆரம்பநிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல்இ தென்னைமரத்தின் குருத்துப் பகுதி நீங்கலாக அனைத்து இலைகளும் உடைந்து தொங்கும் அறிகுறிகள் காணப்படும். அதைத் தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து அது மேல் நோக்கி பரவும், கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி, தண்டின் அடிப்பகுதியும் அழுகிவிடும். மரப்பட்டை எளிதில் உடையக்கூடியதாக மாறி, அடிக்கடி செதில்களாக உரிந்து திறந்தவெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும். மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து, சிதைந்து, துர்நாற்றம் வீசும். தண்டின் அடிப்பகுதியில் அரைத்தட்டு காளான்வித்து தோன்றும். கடைசியில் மரம் மடிந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் குறையும்.
உழவியல் முறை : நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்துவிட வேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை மடக்கி உழுதுவிட வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட மரத்திற்கு ஒரு வருடத்திற்கு மரத்தை சுற்றி 4 அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். நீர் பாய்ச்சும்போது பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து பிற மரங்களுக்கு நீர் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உயிரியல் முறை:சூடோமோனாஸ் புளோரசன்ஸ் மற்றும் டிரைகோடெர்மாவிரிடி ஆகிய உயிரியல் பூஞ்சணக்கொல்லி மருந்துகளைத் தலா 200 கிராம் வீதம் கலந்து மரம் ஒன்றிற்கு இட வேண்டும். பாஸ்டோபாக்டீரியா மற்றும் அசிட்டோபாக்டர் ஆகிய உயிர் உரங்களை தலா 200 கிராம் அளவு 50 கிலோ தொழு உரத்துடன் 5 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து மரம் ஒன்றிற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை இடலாம்.
இரசாயன முறைகள் : தென்னை வாடல் நோயினை கட்டுப்படுத்திட மரம் ஒன்றுக்கு புரோபிகோனசோல் என்ற மருந்து 10 மிலியினை 100 மிலி தண்ணீருடன் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும்.
காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற மருந்து 50 கிராம் அளவு 10 லிட்டர் தண்ணீர் கலந்து மரத்தை சுற்றி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.
மரம் ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரத்துடன் 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு மற்றும் 2 கிலோ சிகப்பு பொட்டாஷ் கலந்து 3 அடி தூரம் தள்ளி மண்ணில் உரமாக கொடுக்க வேண்டும். சாறு வடியும் பகுதிகளில் போர்டோ கலவையினை தடவிட வேண்டும்.
போர்டோ கலவை தயார் செய்யும் முறை: ஒரு கிலோ காப்பர் சல்பேட், ஒரு கிலோ சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் 50 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். காப்பர் சல்பேட் கரைசலை எடுத்து சுண்ணாம்புக் கரைசல் உள்ள பிளாஸ்டிக் கலனில் சிறிதுசிறிதாக விட்டுக் கலக்கி தயார் செய்திட வேண்டும். இந்த கலவை போர்டோ கலவை எனப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தென்னை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் தென்னை வாடல் நோயினை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) மெ. சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.