உதவித்தொகை பெற மாணவி பெயரில் வங்கி கணக்கு முக்கியம்
தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற, மாணவி பெயரில் வங்கி கணக்கு, இருப்பது மிக முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலுார் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். இதில், 25 சதவீத மாணவியரின் வங்கிக்கணக்குகள் மாணவியர் பெயரில் இல்லாமல், பெற்றோர் பெயரிலும், ஜாய்ன்ட் அக்கவுண்டாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:
கல்லுாரி தரப்பில் மாணவியர் பெயர், பாடப்பிரிவு, கல்லுாரி செயல்படும் மாவட்டம், சேர்ந்த ஆண்டு ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பள்ளி தரப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது வங்கி சார்பில் வங்கிக்கணக்குகள், ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.இதில், மாணவியர் பலர் தங்கள் பெற்றோரின் பெயரில் உள்ள கணக்குகளை இணைத்துள்ளனர். எங்கள் கல்லுாரியில், 298 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டதில், 53 பேரின் விண்ணப்பங்களில் சிக்கல் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதே வங்கியில் மாணவியர் பெயரில் கணக்கு துவங்கி, 'அப்டேட்' செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.