பூரனின் அதிரடியால் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி! ரசிகர்கள் ஏமாற்றம்!
இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி
HIGHLIGHTS
இந்திய அணி மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வரும் ஆசிய கோப்பை, உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பயம் கொள்கின்றனர் ரசிகர்கள்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில் டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது.
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்தது. இதனால் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி கயானாவில் தொடங்கி நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணியின் துவக்க வீரர்களாக இஷன் கிஷன், சுப்மன் கில் இருவரும் தங்களது பொறுப்பற்ற விளையாட்டால் விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இஷன் கிஷன் 27 ரன்கள் எடுத்தாலும் சுப்மன் கில் 7 ரன்களில் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். திலக் வர்மா நிதானமாக ஆடி 50 ரன்களைக் கடந்தார். சஞ்சு சாம்சன் 7, பாண்டியா 24, அக்ஷர் படேல் 14, பிஷ்ணோய் 8, அர்ஷ்தீப் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி.
மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 67 ரன்கள் எடுத்தார். பவல் 22 ரன்களும் ஹெட்மயர் 21 ரன்களும், ஹொசைன் 16 ரன்களும் ஜோசம் 10 ரன்களும் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக தனது இலக்கைத் துரத்தி எட்டியது.
7 பந்துகள் மீதமிருக்கையிலேயே 8 விக்கெட்டுகள் இழப்புடன் 155 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி. பாண்டியா 3 விக்கெட்டுகளையும் சஹல் 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.