/* */

விரதங்களின் வகைகள்; பின்பற்ற வேண்டிய முறைகள் தெரியுமா?

முக்கிய விரதங்கள் மற்றும் அந்த விரத நாட்களில், பக்தர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

விரதங்களின் வகைகள்; பின்பற்ற வேண்டிய முறைகள் தெரியுமா?
X

விரதங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)

சோமவார விரதம்

இது, கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் தொடங்கி, சோம வாரம் தோறும் சிவபெருமானைக் குறித்து பின்பற்றும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம். அது இயலாதவர், ஒருவேளை மட்டும் சாப்பிடலாம். அதுவும் முடியாதவர்கள், ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் சாப்பிடலாம். இவ்விரதம் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். அல்லது பன்னிரண்டு ஆண்டுகள், அல்லது மூன்று ஆண்டுகள், அல்லது ஒரு ஆண்டு என கடைபிடித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் கடைபிடிக்க இயலாதவர், கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது, ஒரு மாதம் கடைபிடிக்க வேண்டும்.


திருவாதிரை விரதம்

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில், சபாநாயகரைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து கடைபிடிப்பது மிகவும் சிறந்தது.

உமாமகேஸ்வர விரதம்

கார்த்திகை மாதத்து பௌர்ணமியில், உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து கடைபிடிக்கும் விரதம். இதில் ஒரு பொழுது பகலில் சாப்பிடலாம். இரவில் பனியாரம், பழம் உட்கொள்ளலாம்.


சிவராத்திரி விரதம்

மாசி மாத கிருஷ்ணபட்ஷ சதுர்த்ததி திதியில், சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். இதில் உணவு சாப்பிடாமல் இருந்து, நான்கு யாமமும் தூங்காமல் விழித்திருந்து, சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் பசையும் அவ்வக் காலத்தில் செய்வது உத்தமம். ஒரு காலத்தில் சேர்த்துச் செய்வது மத்திமம். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி நானள்கு யாமப் பசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமஸ்கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்க முதலிய மூல மூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்திற்கும் மாத்திரம் பூசை செய்யலாம்.


பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம். சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் உண்ணல் மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம்,

சிவராத்திரி தினத்தில், ராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும். நான்கு யாமமும் நித்திரையழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரையழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனம் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதம் சைவசமயிகள் யாவராலும் அவசியம் கடைபிடிக்கத்தக்கது.

கேதார கவுரி விரதம்

புரட்டாதி மாதத்தில், சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாம். இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதல் இருபது நாளும், ஒவ்வொரு உணவு சாப்பிட்டு, இறுதி நாளாகிய சதுர்த்தசியில் கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, விரதம் இருக்க வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பனியாரம் உட்கொள்ளலாம்.

பிரதோஷ விரதம்

சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியில், சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்தில், சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி கடைபிடிக்க வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானஞ்செய்து சிவபூசை பண்ணித் திருக்கோயிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு சாப்பிட வேண்டும்.

பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டும் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனம் செய்து கொண்டுவரின் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு உத்தமகாலம் ஆகும்.


சுக்கிரவார விரதம்

சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்ழிதூறும் பார்வதி தேவியாரைக் குறித்து கடைபிடிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே உணவு உண்ண வேண்டும். நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமியீறாகிய முதல் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து கடைபிடிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பனியாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.


விநாயக சதுர்த்தி

ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ஷத்து சதுர்த்தியில் விநாயகக்கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு வேளையில், பகலிலே உணவு சாப்பிட்டு, இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

விநாயக சஷ்டி விரதம்

கார்த்திகை மாத்தது கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு வேளை மட்டுமே சாப்பிட்டு, இறுதி நாளாகிய சஷ்டியில் விரதம் செய்தல் வேண்டும்.


கார்த்திகை விரதம்

கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து கடைபிடிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளலாம். இவ்விரதம் பன்னிரெண்டு ஆண்டுகள் கடைபிடிக்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம்

ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது முடியாதவர் முதல் ஐந்து நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசம் செய்யலாம். இவ்விரதம் ஆறு வருஷ காலம் கடைபிடித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

Updated On: 31 July 2023 5:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!