திருமணம் ஆகாமல் தடையாகுதா..? திருவேள்விக்குடி சென்று வாருங்கள்..!
Kalyanasundareswarar Temple Thiruvelvikudi-திருவேள்விக்குடி , கோவிலுக்குச் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை தரிசித்து வந்தால் தடையாகி நிற்கும் திருமணம் நடந்துவிடும்.
HIGHLIGHTS
Kalyanasundareswarar Temple Thiruvelvikudi-திருவேள்விக்குடியில் அமைந்துள்ள சிவஸ்தல இறைவன் பெயர் கல்யாணசுந்தரேஸ்வரர் ஆகும். இறைவியின் பெயர் பரிமளசுகந்த நாயகி. அங்குள்ள தீர்த்தம் கௌதகாபந்தன தீர்த்தம்.
இந்த ஆலயத்துக்கு செல்லும் வழி :
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 5 கி.மி. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உள்ளன. பேருந்து வசதியும் உள்ளது.
தல வரலாறு :
ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடந்துகொண்டதால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழக் கட்டளையிட்டார். பசு உரு கொண்ட உமாதேவி தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது நானே தோன்றி உன்னை மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.
உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உரு கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.
சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மணல் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது.
பார்வதி-சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
கோவில் அமைப்பு:
இங்குள்ள கோவில் 3 நிலையுடன் கூடிய இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். கணபதி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன.
thiruvelvikudi kalyana சுந்தரேஸ்வரர்
சாபம் நீங்கிய அகத்தியர் :
அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி ஒன்று இருக்கிறது. செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோரது காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன.
திருமணஞ்சேரி :
இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்றது. தல வரலாறுப்படி சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலால் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் "கௌதுகாபந்தன க்ஷேத்திரம் " என்றும் பெயர் உண்டு.
அரசகுமாரன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறும் முன் அவள் பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் இறைவனை நோக்கித் தவஞ் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒரு பூதத்தின்மூலம் கொண்டுவந்து, அவனுக்குத் திருமண வேள்வி செய்தருளியதாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது.
கோவிலின் சிறப்பு :
நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பு. மணவாளேஸ்வர சுவாமி திருமண கோலத்துடன் திகழ்கிறார். கல்வெட்டுகளில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.
திருமணம் ஆகாத பெண்கள் அல்லது ஆண்கள் இந்த ஆலயத்துக்குச் சென்று கல்யாணசுந்தரரை வழிபட்டு, திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழுங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2