/* */

1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்; அனுமனை தரிசிக்கலாம் வாங்க...!

namakkal news, namakkal news today- நரசிம்மரை வணங்கி நிற்கும், ஆஞ்சநேயரை தரிசிக்க நாமக்கல்லுக்கு செல்லலாம். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்தால், நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும்.

HIGHLIGHTS

1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்; அனுமனை தரிசிக்கலாம் வாங்க...!
X

namakkal news, namakkal news today- வடைமலை சாத்தப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமி (கோப்பு படம்)

namakkal news, namakkal news today-- தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கும் திட்டம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பல்வேறு கோவில்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் மற்றும் நரசிம்மசுவாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.


இந்நிலையில், நரசிம்மசுவாமி கோவிலில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. நாமக்கல் நரசிம்மசுவாமி கோவிலில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது ஆஞ்சநேயர் கோவில். இங்கே ஆஞ்சநேயருக்கு கட்டளைதாரர்கள் மூலம், வடைமாலை சாத்தப்படுகிறது.

இந்த பூஜையின் போது, கட்டளைதாரர்களுக்கு 3 விதமான பிரசாதம், கோவில் நிர்வாகத்தின் மூலம் தரப்படுகிறது. பெரும்பாலான கட்டளைதாரர்கள் பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்து விடுவார்கள். அத்துடன், ஆஞ்சநேயருக்கு உகந்த நாட்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மற்றபடி கோவிலுக்கு தினமும் வந்துசெல்லும் பக்தர்களுக்கு, துளசி தான் பிரசாதமாக தரப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி, தினமும் 3 விதமான பிரசாதம் நாள் முழுவதும் பக்தர்களுக்கு தரப்படுகிறது.


இதற்காக நரசிம்மசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளி அருகில், சமையல்கூடம் அமைக்கப்பட்டு, தினமும் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் கோயில் நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை, வெண்பொங்கல் பிரசாதமாக தரப்படுகிறது. பின்னர், 10 மணிக்கு மேல் மதியம் நடை சாத்தும் வரை, 1.30 மணி வரை, புளியோதரை பிரசாதமாக அளிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தரப்படுகிறது. இரவு கோயில் நடை சாத்தும் வரை பக்தர்கள் சர்க்கரை பொங்கலை பிரசாதமாக பெறலாம்.


அதன்படி நாள்தோறும், சராசரியாக 400 முதல் 500 பேருக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 1000 பேருக்கு அதிகமாக கோவிலுக்கு வந்து செல்வதால், அன்றைய தினங்களில் அனைவருக்கும் பிரசாதம் கிடைக்கும் வகையில் கூடுதலாக தயார் செய்யப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில், பக்தர்களுக்கு புளியோதரையுடன் வடையும் பிரசாதமாக தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.


கோவில் வரலாறு

ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

அப்போது, 'ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு, பிறகு வந்து என்னை எடுத்துச் செல்' என்று அசரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கு அருள்பாலிக்கிறார்.

தலத்தின் பெருமைகள்

இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண் டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம். தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதி யில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார். மிக பிரமாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.


வடைமாலை நேர்த்திக் கடன்

முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடுபடுகின்றனர் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகின்றனர்.

கோபுரம் இல்லை

லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

தங்க ரதம்

இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, அதற்கான கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபட்டு வருகின்றனர்.

108 தங்க மலர் அர்ச்சனை செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அர்ச்சனை செய்யும் நேரம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை. மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.00மணி வரை ஒரு கட்டண சீட்டுக்கு அதிகபட்சமாக 5 பெயர்கள் (ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்யப்படும்)


பிரார்த்தனை சீட்டு மூலம் கோரிக்கை நிறைவேறும்

மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் "ஸ்ரீஆஞ்சநேயா போற்றி" என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகின்றனர். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

முக்கிய திருவிழாக்கள்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலோடு இணைந்து ஆஞ்சநேயர் கோவில் இருப்பதால் இந்த கோவில்களுக்கு திருவிழாக்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது.

தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)

தெலுங்கு வருடப் பிறப்பு

வைகாசி விசாகம் (ஏப்ரல் - மே)

ஆடி 18 (ஆகஸ்ட்)

ஆடி பூரம் - ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை

ஆவணி பவுத்திர உற்சவம் (செப்டம்பர்)

ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டம்பர்)

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் - அக்டோபர்)

புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்டம்பர் - அக்டோபர்)

நவராத்திரி உற்சவம் (அக்டோபர்)

விஜயதசமி

திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)

அனுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை)

மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்

வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)

அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)

வருட உற்சவம் (பங்குனி)

அஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடைபெறும்.


போக்குவரத்து வசதிகள்

நாமகிரி என்ற சிறப்புமிக்க நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் வீற்றிருக்கிறது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி நடந்து கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்சில் டிரைவர் பஸ்சை நிறுத்தினால், கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம். இல்லை என்றால் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆட்டோவில்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர முடியும். இக்கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. இக்கோவில் சேலத்தில் இருந்து 57 கி.மீ தூரத்திலும், கரூரில் இருந்து 43 கி.மீ தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கி.மீ தூரத்திலும், கோவையில் இருந்து 120 கி.மீ தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கி.மீ தூரத்திலும் உள்ளது.

இந்த கோவிலுக்கு முக்கிய நகரங்களில் இருந்து ரயில் மூலமும் வரலாம். நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரயிலும் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்.

Updated On: 4 Feb 2023 7:40 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?