இன்று வானில் தோன்றும் மூன்றாம் பிறையை தரிசனம் செய்து பாருங்களேன்...
இன்று வானில் தோன்றும் மூன்றாம் பிறையை தரிசனம் செய்து பாருங்களேன்... நிறைய பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
HIGHLIGHTS
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளானது விதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இன்று (திங்கட்கிழமை) இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
மூன்றாம் பிறை தரிசனம் குறித்து தூத்துக்குடி ஶ்ரீ பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் கூறியதாவது:-
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது. மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள். மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா?பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வோம்.
மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான். நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும். ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும். ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும். பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும். வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும். நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்.
மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர் என ஶ்ரீ பிரத்தியங்கிரா பீடம் நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.