திருப்பதியில் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்
திருப்பதியில், 30 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
HIGHLIGHTS
Devotees who waited for 30 hours in Tirupati- திருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக வார விடுமுறை இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்கின்றனர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. எப்போதுமே தங்க வைர நகைகளை அணிந்து பக்தர்களுக்கு, ஏழுமலையான் தரிசனம் தருகிறார். வாழ்வில் ஒருமுறையேனும் ஏழுமலையாைன தரிசிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால், மாதந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருப்பதி சென்று வருவதை வழக்கமாக்கிக்கொள்கின்றனர். இன்னும் பலர், குடும்பத்துடன் ஆண்டுக்கு ஒருமுறை, திருப்பதி கோவிலுக்கு சென்று, வாரக்கணக்கில் இருந்து, சுவாமியை தரிசனம் செய்தும், சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இலவச தரிசனத்துக்கு செல்லும் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பி ஷீலா தோரணம் வரை, 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்த பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள், 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று, 86,781 பேர் தரிசனம் செய்தனர். 44,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.3.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி மலைப் பாதையில் நேற்று பக்தர்கள் வந்த கார் சாலையோரம் தடுப்பு சுவரில் மோதியது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர். மலைப்பாதையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பக்தர்கள் காயம் அடைந்து வருகின்றனர். விபத்தை தடுக்கும் விதமாக போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக செல்லக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.