கோடி புண்ணியம் பெற, சிவாலயம் எழுப்புங்கள்!
ஒருவர் மனதில், ‘சிவாலயம் எழுப்ப வேண்டும்’ என நினைத்தாலே, அவர் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவார் என்கிறார் அகத்தியர்.
HIGHLIGHTS
சிவன், இந்து சமய மும்மூர்த்திகளில் ஒருவர். சைவ சமயத்தின் முழுமுதல் கடவுளாக, பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக இருப்பதால், 'பரமசிவன்' என அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு, தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்றும் பொருள் உண்டு. சைவ மரபில், சிவம் சக்தி ஆகிய இரண்டும் இரு அம்சங்கள். அவற்றைப் பரசிவம், ஆதிசக்தி என நோக்கும் சைவர்கள், அந்த இரு பேராற்றல்களை பார்க்கின்றனர்.
கோவில்களை கட்டுவது கோடி புண்ணியம் என்கின்றனர். அதனால், அந்த காலத்தில், மன்னர்கள் கோவில்களை கட்டி, தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவில், இன்றும் தமிழக சிறப்புகளில் முக்கியமானதாக திகழ்கிறது.
ஒருவர் சிவாலயம் அமைத்தால் பெறும் புண்ணியங்கள் ஏராளம்; அதுபற்றி, அகத்தியர் பல்வேறு தகவல்களை தந்திருக்கிறார்.
* தன் வாழ்நாளில், ஒரு சிவாலயத்தை கட்டி எழுப்புபவர், தினமும் சிவெபருமானை பூஜித்த பலன் பெறுகிறார். அவர் குலத்தில் பிறந்த சிறந்த முன்னோர்களில், நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.
* ஒருவர் சிவாலயம் எழுப்ப வேண்டும் என மனதில் நினைத்தாலே, அவர் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவார். நினைத்ததுபோலவே சிவாலயம் கட்டி முடித்தால், சகலவிதமான போகங்களும் அவரை வந்தடையும்.
* கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புபவர், ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு ஆயிரம் வருடம் என, சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவார்.
* ஒருவரைக் கொண்டு சிவலிங்கத்தை செய்விப்பவருக்கு, சிவலோகத்தில் 60 ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருக்கும் பாக்கியம் கிடைக்கும். அவரது வம்சத்தவர்களும் சிவலோகத்தை அடையும் புண்ணியம் பெறுவர்.
* சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர், தன்னுடைய எட்டு தலைமுறை முன்னோர்களை, சிவலோகம் அடையச் செய்வார். அப்படி ஒருவரால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்வதைக் கண்டு, 'நாமும் இதுபோல் செய்தால் நற்கதி அடையலாமே' என்று நினைத்தாலே போதும், அவருக்கு முக்தி நிச்சயம்.
* எந்த நேரமும் சிவபெருமானை மனதில் நினைத்து தியானித்து வருபவர்கள், ஈசனை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக் கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள், காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கி சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் எமதர்மன் நெருங்க மாட்டார்.
* சிவாலயம் சென்று இறைவனுக்கு தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவர், ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.
* தேய்பிறை சதுர்த்தசியில் சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால், அதுவரை செய்த பாவங்கள் விலகும்.
* பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிவலிங்கத்துக்கு, அபிஷேகம் செய்து பூஜிப்பவர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவார்.