நாளை ஆடிமாத பிறப்பு: தமிழக கோயில்களில் சிறப்பு பூஜை
நாளை ஆடிமாத பிறப்பையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும். காவிரியில் குளிக்க பொதுமக்கள் அதிகம் பேர் திரள்வார்கள் என்பதால் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாளை ஆடிமாத பிறப்பு
தமிழக கோயில்களில் சிறப்பு பூஜை
நாளை ஆடி மாத பிறப்பையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு. அந்த வகையில் ஆடிப்பட்டம் தேடி விதை என்பது தமிழகத்தின் சிறப்பு . விவசாயிகள் ஆடிமாதத்தில் தங்களுடைய வயல்களில் விதை விதைத்து விவசாயபணிகளில் மும்முரம் காட்ட துவங்குவர். அதேபோல் விவசாய வேலைகளும் அவ்வளவாக இருக்காத நிலையில் ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள கோயில்களின் திருவிழாக்கள் துவங்கும். ஆடிமாதத்தில் தமிழகத்தின் சிறப்பு பெற்ற அம்மன் கோயில்களான சமயபுரம் மாரியம்மன், சென்னை திருவேற்காடு அம்மன். மதுரை பேச்சியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், மேச்சேரி பத்ரகாளியம்மன், உள்ளிட்ட மாநிலத்திலுள்ள அனைத்து அம்மன் கோயிள்களிலும் பூச்சாட்டு விழாவோடு திருவிழாக்கள் துவங்குவது வாடிக்கை. இந்த ஆண்டும் கொரோனா பரவல் எதுவும் இல்லாததால் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தினைப்பொறுத்தவரை ஆடிமாதத்தில்தான் அனைத்து ஜவுளிக்கடைகளிலும் ஆடிசேல் என்று சொல்லப்படும் ஆடித்தள்ளுபடி விற்பனை துவங்கும். அந்தவ கையில் நாளைமுதல் ஆடித்தள்ளுபடி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஜவுளிக்கடைகளில் களை கட்ட துவங்கிவிடும்.
ஆடிமாதத்தில் துவங்கும் திருவிழாக்கள் பல ஊர்களில் வாரக்கணக்கில் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் செலவில் சிறப்பு பூஜை அலங்காரம் நடக்கும். பல கோயில்களில் தினந்தோறும் அன்னதான நிகழ்ச்சியும்., மாலை நேரங்களில் ஆ்ன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வினாடிவினா, கலை நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு விரிவான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
தேங்காய் சுடும் நிகழ்ச்சி
ஆடிமாத பிறப்பு என்றாலே அழிஞ்சிகுச்சி விற்பனையானது மார்க்கெட்டில் களை கட்ட துவங்கிவிடும். அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து ஊர்களிலும் இக்குச்சியானது கட்டுக்கட்டாக விற்பனைக்கு வந்தன. இதற்கும் டிமாண்ட் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கி சென்றதை காண முடிந்தது. நாளை மாலை அனைத்து வீடுகளிலும் தேங்காய் சுடும் பண்டிகையானது விமர்சையாக நடக்கும். தேங்காயில் துளை போட்டு பருப்பு, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பல பொருட்களை இட்டு அதனை அழிஞ்சிக்குச்சியில் சொருகி குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து தீயில் சுடுவர். பின்னர் அதனை அனைவரும் சாப்பிடுவதோடு உறவுகள், நண்பர்களுக்கும் வழங்குவர். இது பாரம்பரியமாக ஆண்டுதோறும் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வாகும்.
ஆண்டுதோறும் ஆடி என்றாலே காவிரியில் செந்நீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக காவிரி கரையோரத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மிகவும் கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கப்படுவதால் இன்று இரவு முதலே ஒகேனக்கல், மேட்டூர் , திருச்சி, உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் குளிப்பதற்காக பொதுமக்கள் பயணம் செய்ய துவங்கிவிடுவார்கள். தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும்பொதுமக்கள் ஆற்றங்கரையில் தண்ணீர்குறைவான பகுதிகளில் குளிப்பதற்காக செல்வர். அங்குள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஆடி மாதம் என்றால் தமிழகத்தினைப்பொறுத்தவரை தெய்வீக மாதமாக கருதப்படுவதால் மாநிலத்திலுள்ள அனைத்து அம்மன்கோயில்களி்லும் இம்மாதம் முழுக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். அதேபோல் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் வழக்கத்தினைவிட கோயில்களுக்கு அதிகம் செல்வார்கள் என்பதால் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.