5 பேர் அணிக்கு செக்..... தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரியே நீடிப்பார் அகில இந்திய காங். தலைவர் கார்கே அதிரடி
no change in tamilnadu congress president தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை மாற்ற வேண்டும் என போர்க்கொடி துாக்கிய 5 பேர் அணியின் கோரிக்கையினை நிராகரித்தார் கார்கே.
HIGHLIGHTS

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே.
no change in tamilnadu congress president
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என புதியதாக 5 பேர் கொண்ட அணி அமைத்து டில்லியில் முகாமிட்டவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே செக் வைத்து இப்போதைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என நிராகரித்து விட்டார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் செய்யவேண்டிய மாற்றங்களை முன்னாள் தலைவர்கள் சோனியா,ராகுல் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தபின் முடிவெடுக்கப்படும் என கார்கே தெரிவித்துள்ளார்.2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணிகள்தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது. இக்கூட்டத்தில் காங். மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், பொருளாளர் ரூபிமனோகரனின் ஆதரவாளர்களுக்கும் நடந்த மோதலானது கைகலப்பில் முடிந்ததில் ஒருசிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.
no change in tamilnadu congress president
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் சத்தியமூர்த்தி பவன் சென்னை (கோப்பு படம்)
no change in tamilnadu congress president
பின்னர் இதுகுறித்து இம்மாதம் 24 ந்தேதி கட்சியின் தலைமையிடம் இருதரப்பினரும் விளக்கம் அளிக்க வேண்டும் என கட்சி தெரிவித்திருந்தது. இந்த அடி தடி சம்பவத்திற்குப் பின்னர் தலைவர் கே.எஸ். அழகிரியை மாற்றவேண்டும் என ஒரு ஐந்து பேர் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பு அணியை உருவாக்கினர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, இளங்கோவன் ,கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ கோபிநாத், சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை என ஐந்துபேரும் இதுகுறித்து பேச டில்லி சென்றனர்.டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன் கார்கேவைச் சந்தித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில்நடந்த பிரச்னைக்கு கே.எஸ் அழகிரி தரப்பினர்தான் காரணம் எனவும் நேரில் தெரிவித்தனர். சமீப காலமாக தமிழகத்தில் தேசிய எதிர்க்கட்சியான பாஜ தன் வளர்ச்சிக்கு பல்வேறு விதத்தில் காய் நகர்த்தி வருவதால் அதற்கு இணையான நபர் ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என கார்கேவிடம் கோரிக்கை விடுத்தனர்.
தற்போதைய காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டி அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவசியம் மாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட அகில இந்திய தலைவர் பின்னர் கூறும்போது, தமிழகத்தில் தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை இப்போது வைக்காதீர்கள். சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவங்களை தினேஷ் குண்டுராவ் தன்னிடம் விளக்கம் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபைதேர்தல் நடக்க உள்ளது. முன்னாள் காங். தலைவர் ராகுலின் நடைப்பயணம் வெற்றி பெறவேண்டும். அதற்கு எந்த வித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது. ராகுலிடம் ஆலோசித்தபின் தேசிய அளவில் கட்சியி்ன் கட்டமைப்பை பலப்படுத்துதல், செயலர்கள் மற்றும் பொதுச்செயலர்கள் நியமனம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் ஐவரும் இதுகுறித்து முன்னாள் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து விளக்கம் சொல்லலாம் என முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு சந்திப்பதற்கான அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் சென்னை திரும்பி விட்டனர்.
இதுகுறித்து முன்னாள் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டு பேசியுள்ளனர். அதாவது முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டில்லிக்கு அழைத்த போது அவர் செல்லமறுத்துவிட்டார். அவருக்கு பதிலாகவே முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் சென்றார்
அழகிரி சுற்றுப்பயணம்
மாநிலத் தலைவர் முடிவில் எந்த மாற்றமுமில்லை என அகில இந்திய தலைவர் கார்கே உறுதியாக சொல்லி விட்டதால் தலைவர் கே.எஸ். அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் வரும் 27 ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரையில் கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 76மாவட்டங்களுக்கு மாநிலத்தலைவர் அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
no change in tamilnadu congress president
தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி (கோப்பு படம்)
இதன் முதல் கட்டமாக விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடிகளை ஏற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்குபின்னர் லோக்சபா தேர்தலுக்கான பூத்கமிட்டி உறுப்பினர் பட்டியலை தயார் செய்யும் பணிகளைத் துவக்க உள்ளார்.
மேலும் தற்போது தமிழகத்தில் கட்சித்தலைமைக்கு கட்டுப்படாமல் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை லிஸ்ட் எடுத்து டில்லிக்கு கட்சித்தலைமைக்கு அனுப்பி அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் . அழகிரி திட்டமிட்டுள்ளார் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.