பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துபாய் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பும்போது பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
HIGHLIGHTS
துபாய் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பும்போது பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் துபாய் சென்றுள்ளார். தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க, தமிழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான இணையதள வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றிய அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சென்றுள்ளனர்.
முதல் அயல்நாட்டு பயணம்: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 31-ம் தேதி மாலை அல்லது ஏப்ரல் 1-ம் தேதி காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி திரும்ப உள்ளார்.
இதன்பின் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும். ஆனால் எப்போது நடக்கும் என்ற விவரம் வெளியாகவில்லை, இந்த சந்திப்பிற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் முக்கிய அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி, எய்ம்ஸ் பணிகள் நடக்காமல் இருப்பது, மேகதாது பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களை பற்றிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அது. அதோடு ஆளுநர் ஆர். என் ரவி பற்றியும், அவரின் சமீபத்திய பேச்சுக்கள், நீட் மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேச இருப்பதாக தகவல்கள் வருகின்றன.