'பசியோடு யாரையும் விட்டு விடாதீர்கள்'- இன்று உலக உணவு தினம்
உலகில் இதுவரை நடந்த மனிதனின் பலவிதமான போராட்டங்களின் அடிப்படையில் பசி இருந்திருக்கிறது. ஏனெனில் உயிர்வாழ்தலின் முக்கியத்துவம் உணவு. அது, ஒவ்வொரு உயிருக்கும் மிக அவசியம்.
HIGHLIGHTS
உலக உணவு தினம், ஒவ்வொரு ஆண்டும் இன்று, (அக். 16) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், அத்துடன், மாறிவரும் உணவுப் பழக்கம் , இதனால் மாறும் வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்ட வேண்டியதும் காலத்தின் அவசியமாகிறது.
உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, இந்த நாளை உருவாக்கியது. மேலும் இந்த நாள். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல், உணவினை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் வரை அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் உள்ளது.
இன்று அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் விவசாயத்தில் போதிய முன்னேற்றங்கள்.இருந்தாலும் வறுமை, பஞ்சம், உணவுப் பற்றாக்குறை இருக்கவே செய்கிறது. தினமும் உணவுக்காக அலைவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
இந்த நூற்றாண்டின் மத்திக்குள் மக்கள் தொகை 30 சதவிகிதம் அதிகரித்து 9 பில்லியனாக மாறும் என்பது மக்கள் தொகைக் கணக்கீட்டாளர்களின் மதிப்பீடு. அதன்படி வரும் உணவுத் தேவைகளை சமாளிக்க 70 சதவிகித உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும். ஆனால், ஆண்டுதோறும் உணவு உற்பத்தியின் விழுக்காடு குறைந்துகொண்டே போகிறது.
மேலும், விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உடல்பருமன் போன்றவை ஒன்றுடன் ஒன்று இணைந்த விஷயங்கள். ஏற்கனவே உலகளவில் எட்டில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்படுகிறார். இவர்களில் 75 சதவிகிதத்தினர் நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் உணவு உற்பத்திக்கு கிடைக்கும் தொழில்நுட்ப, இயற்கை வளங்களின் கட்டுப்பாடுகள் உலகளாவிய உணவு உற்பத்தியையும் கட்டுப்படுத்தும். இதற்கான ஆய்வுகளில் செலவிடப்படும் தொகையும் குறைந்துள்ளது. மேலும் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்களும் எளிய, சிறு விவசாயிகளைச் சென்றடைவதில்லை. இந்த முறைகள் மாற்றப்பட்டு உணவுத் தேவைகளை சமாளிக்கும் புதிய நுட்பங்களும் கண்டறியப்படுதல் வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் ''பசியோடு யாரையும் விட்டுவிடாதீர்கள்' என்பதாகும். பசி, பட்டினியால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, இறப்பு போன்றவற்றை எதிர்கொள்ள இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. அதையும் தாண்டி ஊட்டச்சத்து உணவுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோளாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் கணக்கீட்டின் படி, உலகளவில், ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர், வளர்ச்சி குன்றியுள்ளனர், பலருக்கும் போதிய ஊட்டச்சத்து இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது.
உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் அப்புறப்படுத்திவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் உணவை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது. வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியின்றி தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.