/* */

திருமணங்கள் ஜாதகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன..! இப்போ ஆன்லைனிலும்..!

Jathagam in Tamil Porutham-பொதுவாகவே திருமணங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையவேண்டும் என்பதால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது வழக்கம்.

HIGHLIGHTS

Jathagam in Tamil Porutham
X

Jathagam in Tamil Porutham

Jathagam in Tamil Porutham-திருமணத்தில் ஜோடிப்பொருத்தம் 'ஜோர்' என்பார்கள். ஆனாலும் ஜோடி ஜோராக இருந்தாலும் ஜாதகம் பொருத்தம் வேண்டும். அப்பதாங்க கல்யாணமே நடக்கும். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் ஒரு திருமணம் நடப்பதில்லை. அதிலும் குறிப்பாக 10 பொருத்தம் பார்ப்பார்கள். ஜாதகம் எதன் அடிப்படையில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம் வாங்க..!

ஜாதகப் பொருத்தம் பார்க்கணுமா..?

திருமணம் என்பது வம்ச விருத்திக்காக பல நல்ல அம்சங்களுடன் இணை மகிழ்ச்சியோடும் வளமோடும் வாழ நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். அதிலும் பல நன்மைகளுடன் நடக்கவேண்டும் என்பதற்காக திட்டமிட்ட நல்ல சுப நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைவது மட்டுமன்றி இரு வேறு குடும்பங்களின் புதிய உறவு சேரும் நிகழ்வாகும்.

திருமணம் என்பது ஒருவரின் வாழ்நாளில் ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி ஆகும். (மனசுக்குள் சிரிக்காதீங்க..அது நம்ம நாட்டில் மட்டும்தாங்க) ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு பொருத்தமான துணை அமையாவிட்டால் இருவரின் வாழ்கையும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்க ஆரம்பிக்கும் போது அந்த குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் இல்லறத்தை நடத்தி வம்ச விருத்தி செய்து கடைசி வரை இணை பிரியாமல் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் லட்சியமாகவும் கடமையாகவும் இருக்கும்.

அதனால் தான் இருமனம் இணையும் திருமண வாழ்வில் ஒரு குறிப்பிட்ட ஆணின் ஜாதகத்தோடு ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்துகிறதா என்பதைக் காணும் வழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. எனவே ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியமாகிறது.

ஜாதக பொருத்தம் எப்படி பார்க்கிறோம்?

ஜாதகப் பொருத்தம் பல வகைகளில் பார்க்கப்படுகின்றது. ஒரு சிலர் பெயர் பொருத்தம் வைத்துப் பார்ப்பார்கள். சிலர் நட்சத்திரம் வைத்துப் பார்ப்பார்கள். பெரும்பாலோர் தசவிதப் பொருத்தம் பார்ப்பார்கள். மற்றும் பிறந்த தேதி, நேரம், மற்றும் இடத்தை வைத்து அமைக்கப்படும் ஜாதகம் என பல வழிகளில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பார்கள்.

ராசி மற்றும் நட்சத்திர அடிப்படையில் திருமணப் பொருத்தம்:

இந்த முறையில் திருமணப் பொருத்தம் காண பெண் மற்றும் ஆணின் நட்சத்திரம் மற்றும் ராசி மட்டும் போதும். நட்சத்திரங்கள் மற்றும் ராசி எண்ணிக்கை அடிப்படையில் கணித்து எழுதப்படுகிறது. மேலும் பொருத்தம் பார்ப்பதில்,ராசிக்கான விலங்கு, கணம் முதலியவையும் கருத்தில் கொள்ளப்படும். இந்த முறையை தசவித பொருத்த முறை என்றும் கூறலாம். இது பொதுவாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது.

தசவிதப் பொருத்தங்கள்:

தினப் பொருத்தம்:

தினப் பொருத்தத்தை நட்சத்திரப் பொருத்தம் என்றும் கூறலாம்.

கணப் பொருத்தம்:

இது கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை பற்றிக் கூறும் பொருத்தம்.

மகேந்திரப் பொருத்தம்:

இது புத்திர பாக்கியம் பற்றிக் கூறும் பொருத்தம்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:

தன, தான்ய விருத்தி பற்றிக் கூறும் பொருத்தம்.

யோனிப் பொருத்தம்:

கணவன் மனைவி இல்லற வாழ்வைப் பற்றிக் கூறும் பொருத்தம்.

இராசிப் பொருத்தம்:

இரு குடும்பங்களின் உறவுமுறை பற்றி கூறும் பொருத்தம்.

இராசி அதிபதி பொருத்தம்:

கணவன் மனைவி புரிந்துணர்வு பற்றிக் கூறும் பொருத்தம்.

வசியப் பொருத்தம்:

ஒருவர் மீது ஒருவர் அன்பு மாறாமல் பிறர் மீதான நாட்டம் இல்லாமல் இருப்பது பற்றிக் கூறும் பொருத்தம்.

ரஜ்ஜுப் பொருத்தம்:

கணவன் மனைவி ஆயுள் பற்றிக் கூறும் பொருத்தம்.

வேதைப் பொருத்தம்:

இன்பத்திலும் துன்பத்திலும் அனுசரித்து நடந்து கொள்வது பற்றிக் கூறும் பொருத்தம்.

மேற்கண்ட தசப் பொருத்தம் என்னும் பத்து பொருத்தம் காண்பதற்கு, திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ராசி மற்றும் நட்சத்திரம் போதுமானது. பத்துப் பொருத்தங்களும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவற்றில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தசப் பொருத்தங்களுக்கு மேற்பட்ட சில பொருத்தங்கள்

தற்காலத்தில் மேற்சொன்ன தசப் பொருத்தங்கள் தான் பெரும்பாலும் பார்க்கப்படுகின்றது. ஆனால் இவற்றைத் தவிர வேறு சில பொருத்தங்களும் இருப்பதை ஜோதிட நூல்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

பட்சிப் பொருத்தம், ஊர்ப் பொருத்தம், கூட்டாளிப் பொருத்தம், மரப் பொருத்தம், நாடி நட்சத்திரப் பொருத்தம், அஷ்ட வர்க்கப் பொருத்தம், நாட்டுப் பொருத்தம், ரேகைப் பொருத்தம் என இன்னும் சில பல பொருத்தம் காணும் முறைகளும் உள்ளன. இவை யாவும் தற்போது நடைமுறையில் இல்லை.

பிறந்த தேதியை வைத்து பொருத்தம் காணும் முறை

திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆண் மற்றும் பெண்ணின் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இதன் அடிப்படையில் அவரவருக்குரிய ஜாதகம் தனித்தனியாகக் கணிக்கப்படும். பின்னர் ஜாதகத்தில் பன்னிரண்டு கட்டங்கள் மற்றும் அவற்றில் 9 கிரகங்கள் அமைந்திருக்கும் நிலை போன்றவையை கருத்தில் கொண்டு பொருத்தங்கள் காணப்படும். ராசி, லக்னம், இவற்றின் அதிபதிகள், குரு, சுக்கிரன் இவற்றின் நிலைகள், காணப்படும். மேலும் செவ்வாய் தோஷம் கருத்தில் கொள்ளப்படும்.

ஜாதகப் பொருத்தம்

ஆண்,பெண் இருவரின் சாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்க்கும் முறை சாதகப் பொருத்த முறை ஆகும். பொதுவாக ஜாதக பொருத்த முறையில் பெண் ஜாதகத்தைத் தான் முதன்மையாக வைத்து பார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

இருவரின் லக்கினம் மற்றும் சந்திரன் ஒன்றுக்கொன்று சஷ்டாஷ்டகமாக அமையக் கூடாது. அதாவது 6,8 ஆக அமையக் கூடாது. குறிப்பாக 16 வது நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் நிற்கக் கூடாது.

பெண் ஜாதகத்தின் 1,2,4,5,7,9,10,11 பாவக அதிபதிகள் ஆண் சாதகத்தில், ஆட்சி, உச்சம், நட்பு, சம நிலையில் இருக்க வேண்டும். மாறாகப் பகை நீசம், அஸ்தமனம் பெறக் கூடாது. துர் ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.

தசை நடத்தும் அதிபதிகளும் சஷ்டாஷ்டகமாக இருக்கக் கூடாது.

இருவர் சாதகத்திலும் தோஷ சாம்யம் இருக்க வேண்டும்.

ஆண் பெண் இருவரும் அமாவாசை, கிரகணம் என பிறப்பு இருக்கக் கூடாது

தசா சந்திப்பு கூடாது. குறைந்தபட்சம் ஒரு வருடம் வித்தியாசம் இருக்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதாவது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கலாம். அல்லது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கக் கூடாது

தோஷம் இல்லாத நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய இந்த நான்கு நட்சத்திரங்களும் மகா நட்சத்திரங்கள் என்று கால விதானம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளன. எனவே பெண் அல்லது ஆண் மேற்கண்ட நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருந்தால் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

எண் கணித முறையில் பொருத்தம்

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது அவரவர் உடல் மற்றும் உயிர் எண்ணுக்கு ஏற்ற யோகமான தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். திருமண நாள் குறிக்கு போது திருமண தேதியின் கூட்டு என்னும் திருமண தேதி, மாதம் வருடம் இவற்றின் கூட்டு என்னும் 1,3,6,9 என்று வருமாறு அமைப்பது மிகவும் நல்லது. மற்ற தேதிகள் உத்தமம் அல்ல.

தமிழில் திருமண /ஜாதகப் பொருத்தம்

தமிழ் திருமண பொருத்த அறிக்கையில் பெண் மற்றும் ஆணின் ராசிக் கட்டம், செவ்வாய் தோஷம், தோஷ சாம்யம், தசா சந்திப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்படுகிறது. திருமணப் பொருத்தத்தில் நட்சத்திரம், ராசி மட்டும் தான் கருத்தில் கொள்ளப்படுகிறது. ஜாதகப் பொருத்தம் என்பது மேலும் விரிவாகப் பொருத்தம் காணும் முறை ஆகும்.

ஆன்லைன் ஜாதகம் பொருத்தம்

இதைத்தவிர ஆன்லைனில் ஜாதகம் பார்ப்பதற்கு உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஜோதிட இணையத்தளத்திற்குச் சென்று மணப்பெண், மற்றும் மணமகன் விபரங்களை உள்ளீடு செய்து விபரங்களைப் பெறலாம். சில இணையதளங்கள் சேவைக்கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையும் பெறுவார்கள். கட்டணம் செலுத்தினால் உங்களுக்கான ஜாதகப் பொருத்த முடிவுகள் கிடைக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2 April 2024 8:47 AM GMT

Related News