Friendship Day 2023-உங்களின் ஆத்ம நண்பர் யார்..? நண்பர்கள் தினத்தில் நட்பறிவோம் வாருங்கள்..!
'உன் நண்பன் யாரென்று கூறு உன்னைப்பற்றி நான் கூறுகிறேன்" என்ற இந்த சொற்றொடரே நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கவேண்டும் என்பதற்கான சான்று.
HIGHLIGHTS
Friendship Day2023 in Tamil, Friendship Day2023, Friendship Day, Friendship Day Quotes
ஆகஸ்ட் 6 நண்பர்கள் தினம். நட்பு உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல சூழ்நிலைகள் இருக்கலாம். சிலருக்குள் இனிய சொல்லாலும், பழகும் விதத்தாலும் நட்பு ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு ஒருவரின் மற்றும் பண்பு காரணமாக நண்பர்களாக ஏற்றுக்கொள்கின்றனர்.
நல்நட்பு எப்போதும் உள்ளன்புடன் உடனிருந்து சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும். துன்பம் வருகின்றபோது உயிரையும் கொடுத்து உதவிசெய்யத் துடிக்கும். நல்ல நட்பின் அடையாளமாக குண நலம், குடி நலம், நற்சுற்றம் போன்றவை பொருந்தப்பெற்றவராகவும், உலகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி நடக்கும் இத்தகைய நற்குணங்களை, நற்செய்கையை உடையவரையே கண்டறிந்து நட்புக் கொள்ள வேண்டும்.
நட்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
அவை, தலை நட்பு, இடை நட்பு, கடை நட்பு ஆகியனவாகும்.
தலை நட்பு
அவற்றுள் தலை நட்பானது சிறந்த நட்பாம். அதுவே முதல் நட்பும் ஆகும். அது மனதாலும் செயலாலும், ஒற்றுமைப்பட்டு ஒருவருடன் ஒருவர் பழகுதலாம்.
அது நாளுக்கு நாள் வளர் பிறைச் சந்திரனைப்போல என்று சொல்வதற்குக் கூட என் மனம் கூசுகிறது. எண்ணெயில் வளர்ந்து பிறை தேயும் என்பதால் நீண்டு வாழும் ஒரு ஆலமரத்தைப் போல வளர வல்லது. நல்ல நூல்களைப் படிக்கும்போது சுவையும் நயமும் தோன்றுவது போல தலை நட்பின் காலத்தில் பயிலுந்தோறும் இன்பமும், அன்பும் பெருகும். இணைபிரியாத இமைபோல , வனமும் மரமும் போல பசுமை போர்த்தி நேசம் சேர்க்கும்.
இடை நட்பு
இடை நட்பு என்பது இடைப்பட்ட காலத்தில் தோன்றியது. இதில் உண்மையும் இருக்கலாம். போலிகளும் இருக்கலாம். நட்பு தோன்றிய சூழல், அதற்கான காரணிகள் போன்றவை உண்மையான நட்பை உறுதிப்படுத்தலாம். சுயநலம் ஓங்கி இருப்பின் நட்பை சுயநலனுக்கு பயன்படுத்தும் போலி நட்பாகவும் இருக்கலாம். இது உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று நடிப்பது ; வெளியில் நட்பும் உள்ளுக்குள் வஞ்சமும் கொண்டு விளங்குவது. இதைக் கண்டறிந்து விலகிக்கொள்வது சாலச் சிறந்தது.
கடை நட்பு
கடை நட்பு என்பது, தன் நண்பனுக்குப் பல வகையான துன்பத்தைச் செய்ய எண்ணும் கீழான நட்பு. இந்நட்பு , விரைவில் அழிந்து ஒழியும் தன்மையது; நீடித்து நிற்காதது. பொய் பேசி எல்லோருக்கும் கெடுதியும் பகையும் விளைவிப்பது; பொறாமை, கோள் சொல்லல், அவதூறுப் பேசுதல், திருடுதல் முதலிய தீயக் குணங்களுக்கு உறைவிடமானது.
இதுவே கூடா நட்பு என்று கூறப்படுகிறது. இக் கடை நட்புக் குணமுடையவர் தம்மால் செய்யக்கூடாத காரியங்களையும் செய்து முடித்து விடுவதாகப் பொய்க் கூறி நேசிக்க வருவர். அதனை நம்பி அவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.
ஒருவர் ஒருவரோடு நட்புக் கொள்ள நேரிடின், அவர் மேற்சொன்ன குணங்கள் உடையவர் என்பதைத் தெரிந்து தெளிதல் வேண்டும். நன்கு ஆராய்ந்து அறிதல் வேண்டும். ஆராயாமல் கொள்ளும் நட்பு தீமையில் முடியும்.
''ஆய்ந்தோய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்
சாந் துயரம் தரும் " என்ற வள்ளுவரின் நட்பு கூறும் பொருளறிந்து நட்பு கொள்ளவேண்டும்.
நாம் ஒரு முறை ஒருவரோடு நட்புக் கொண்டு விட்டால், பின்பு அவரை விட்டுப் பிரியாத வகையிலான நட்பாக தொடரவேண்டும். அவரிடம் குற்றம் கண்டபோதும் அதனைத்திருத்த முயல வேண்டும். "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'' அல்லவா? "நெல் லுக்கும் உமி உண்டு; நீர்க்கும் நுரை உண்டு ; புல் இதழ் பூவுக்கும் உண்டு' என்பதைக் கவனத்தில் வைப்பது நட்பின் இலக்கணமாகும்.
இவ்வாறு நண்பனிடம் உள்ள குறைகளைக் கவனித்து அந்த குறைகளை போக்க முனைதல் நல் நட்பின் அடையாளம். எத்தனை முறை நம் நண்பன் குற்றம் செய்யினும், அத்தனை முறையும் அவற்றைப் பொறுத்தலே உத்தமக் குணமாம்.
நட்பின் இலக்கணமாக விளங்குவோம்: நட்பைப்போற்றுவோம். ஒரு நல்ல புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால், ஒரு நல்ல நண்பன் என்பவன் ஒரு நூலகத்திற்கே சமமானவன்.