/* */

இப்படி ஒரு துன்பமான வாழ்க்கையை வாழவும் வேண்டுமா என்று தோன்றுகிறதா உங்களுக்கு...? அப்போ இதை படியுங்க...

வாழ்க்கை என்பது நியாயங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை, வாழும் அனுபவங்களே நமக்கு கற்றுத் தருகிறது. 'எல்லாம் சரியாகி விடும்' என்ற ஒரு நம்பிக்கையே, கரடுமுரடான வாழ்க்கை பாதையை கடக்க செய்கிறது. நம்பிக்கை மட்டும் இல்லா விட்டால், இந்த வாழ்வு தரும் கஷ்டங்களில் இருந்து மனிதர்களால் தப்பிக்கவே முடியாது என்பதே நிதர்சனம்.

HIGHLIGHTS

இப்படி ஒரு துன்பமான வாழ்க்கையை வாழவும் வேண்டுமா என்று தோன்றுகிறதா உங்களுக்கு...? அப்போ இதை படியுங்க...
X

துன்பங்களால் துவண்ட மனித மனங்களுக்கு தேவையான ஒரு வாசகம் ‘ அட... வாழ்ந்து பார்க்கலாம் வாங்க...’ என்பதுதான்.

சந்தோஷமாக வாழும் வரை மனிதனுக்கு வாழ்க்கை தேன் போல இனிக்கவே செய்கிறது. ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு வாழ்க்கையில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவிக்கும் நிலையும் பலருக்கு ஏற்பட்டு விடுகிறது. நம்பிக்கை துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம், நன்றி மறத்தல் என உறவுகளாலும், சமூக மனிதர்களாலும் வாழ்க்கையில் ஏமாந்து, துவண்டு தத்தளிக்கும் போது, இறைவனும் பலருக்கு துணை நிற்பதில்லை. தொடரும் துன்பங்களால், மனம் வெறுத்து, விரக்தியடைந்த நிலையில்தான், பலரும் தற்கொலை என்ற கோழைத்தனமான, ஆனால் உயிரையே மாய்த்துக்கொள்ளும் 'வீரமான' முடிவை எடுக்கின்றனர். இந்த 'வீரத்தை', எப்படியும் வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்துக்கு அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே மனநல ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது.


வாழ்க்கை எப்போதும் நாம் திட்டமிட்டவாறே நடப்பதில்லை. அதற்கென்று நமது மொத்த திட்டமும் வீண் என்றும் அர்த்தம் இல்லை. நமக்கு எப்படி ஒரு திட்டம் இருக்கிறதோ அது போல நமது வாழ்க்கைக்கும் ஒரு திட்டம் இருக்கும். நம் வாழ்க்கை என்பது நாம் மட்டுமின்றி நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் முதல் அனைத்தாலும் நிறைந்தது. அவற்றால் நம் வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு நாம் வரலாம். அப்படி உணரும்போது என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம்.

நாம் என்னதான் நம் வாழ்க்கை குறித்து திட்டம் போட்டு வைத்திருந்தாலும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களாலோ அல்லது நடக்கும் நிகழ்வுகளாலோ இந்த திட்டங்கள் மாறலாம். அது சில நேரங்களில் நம்மை பலமாக காயப்படுத்தும் நிலைக்கும் தள்ளலாம். அதனால் ஏற்படும் சோர்வு, 'என்ன வாழக்கை இது?' என்று வாழ்க்கையையே வெறுக்கும் அளவுக்கு சூழலை உருவாக்கலாம். ஆனால், அந்த தருணங்களில் மனம் தளராமல் இந்த 5 யோசனைகளை பின்பற்ற வேண்டும். அதுக்கு பிறகு நம் வாழ்க்கை பிரகாசமாக மாறும்.



உணர்வுகளை ஒத்துக்கொள்வது முக்கியம்

பலரும் தங்களுக்கு என்ன உணர்வு தோன்றுகிறதோ, அதை வெளியே சொல்லிவிட்டால் நம்மை பலவீனமாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து கொண்டு, வெளியில் சொல்லாமல் தனக்குள்ளேயே போட்டு மனஅழுத்தத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள். நம் உணர்வுகளுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். அழுவதோ, உணர்வுகளை வெளியே சொல்லி உதவி கேட்பதோ பலவீனம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, எந்த உணர்வுகளாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தி வெளியே அனுப்பி விடுவது முக்கியம்.

ஆனால், நம் துன்பங்களை கேட்கும் பலருக்கு அதில் ஈடுபாடும், அக்கறையும் இருக்காது. டிவி சீரியல் கதை போல தோன்றலாம். அல்லது, மனதுக்குள் நம் துன்பங்களை கேட்டு சிரித்து சந்தோசப்படலாம். அல்லது, அடுத்தவரிடம் நம்மை பற்றி பேசி சிரிக்கலாம். இவனுக்கு இன்னும் வேண்டும் என்று நினைக்கும் வன்மமான மனிதர்களும் உண்டு. எனவே, இறைவனிடம் மனம் விட்டு பேசுங்கள். அல்லது, தனியாக டைரியிலோ, ஒரு நோட்டுப்புத்தகத்திலோ எழுதி விடுங்கள். பின்னர், சில நாட்கள் கழித்து அவற்றை கிழித்து வீசுங்கள்.


குறை கூறும் மனிதர்கள்

பலரும் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளுக்காக, தங்களது சூழலை மட்டுமே குறையாக கூறி கொண்டிருப்பார்கள். சிலர் தன்னை மட்டுமே குறைக்கூறி கொண்டு குற்றஉணர்ச்சி கொண்டிருப்பார்கள். இரண்டுமே தவறுதான். இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

எனவே, ஒரு தவறோ, பிரச்சனையோ நடந்துவிட்டால் அதுக்கு முழுமையான காரணம் நாமோ அல்லது நமது சூழலோ அல்ல. அப்படி இதுதான் முழுமையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாது. சில வேளைகளில், மற்றவர்களின் சூழ்ச்சி, வஞ்சகத்தாலும், துரோகத்தாலும் நாம் வீழ்த்தப்பட்டது பின்பு, தெரிய வரும். 'கூட இருந்தே குழி பறிக்கும்' உறவுகளும், மனிதர்களும் அன்று முதல் இன்று வரை இருக்கவே செய்கிறார்கள். எனவே, குறை கூறுவதை விட்டுவிட்டு எங்கு தவறு நடந்திருக்கிறது, அதன் காரணம் என்ன என்பதை நிதானமாக சிந்தித்து, விட்ட இடத்திலிருந்து மீண்டும் துவங்க வேண்டும். வஞ்சகர்கள், துரோகிகளிடம் இருந்து விலகி கொள்வதே நல்லது.


​'நெகட்டிவ் தாட்ஸ்' எனப்படும் 'எதிர்மறை சிந்தனைகள்'

நாம் 'பாஸிட்டிவ்' ஆகவே இருந்தாலும் பிரச்சனை வராமல் இருக்க போவதில்லை. அதற்கென்று எல்லா நேரமும், 'எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது, எனக்கு நல்லதே நடக்காது, நான் அதிர்ஷ்டம் இல்லாத ஆள். கடவுளால் நான் கைவிடப்பட்டவன். என் பிரச்னைகளை தீர்க்க கடவுளுக்கும் நேரம் இல்லை,' என்று நினைத்து கொண்டிருப்பது நம்மை இன்னும் வேதனை கடலில் மூழ்கடித்துவிடும். அதுவே, நம் மனநிலையாக மாறி கண்ணுக்கு முன்பே நல்லது இருந்தாலும் அதை உணரவோ, அனுபவிக்கவோ முடியாமல் போய்விடும். எனவே, முடிந்தளவு 'பாஸிட்டிவ்' ஆக இருக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசியுங்கள். பலருக்கு உடற்பயிற்சி, நல்ல உரையாடல், வாக்கிங், நடனம் என சில உடல்ரீதியான செயல்பாடுகள் கூட நல்ல மனநிலையை உருவாக்குவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது போன்ற செயல்பாடுகள் நம் மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, நல்ல புத்தகங்களை வாசியுங்கள். அது, ஆயிரம் நண்பர்களுக்கு சமம்.

​நல்லா சாப்பிடுங்க... நல்லதையே சாப்பிடுங்க!

பலரும் சோகமாக, கோபமாக அல்லது மனஅழுத்ததோடு இருக்கும்போது அதை திசை திருப்புவதற்காக சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பலவித நோய்களுக்கு வழிவகுக்குமே தவிர நம் மனதை சாந்தப்படுத்தாது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டாலே, நம்மை சுற்றி 'பாஸிட்டிவ் வைப்ரேஷன்' எப்போதும் இருக்கும். அதனால் 'நல்லா சாப்பிடுங்க, நல்லதையே சாப்பிடுங்க'. ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வது முக்கியம். அதுவே, தேவையற்ற மனஅழுத்த பிரச்சனைகளை தவிர்த்து வாழ்க்கை மீதான வெறுப்பை குறைக்கும்.

உங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

நீங்கள் வாழ்வதற்கு மற்றவர்களும் முக்கியம்தான். ஆனால், முக்கியம் என்ற பட்டியலை திட்டமிடும்போது உங்களை முதலில் முன்னிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் உடல், உங்கள் மனநிலை என்பதை முக்கியத்திற்கும் முதல் பட்டியலில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களை காதலிக்க துவங்கினால்தான், உங்களால் மற்றவர்களை காதலிக்க முடியும்.

உங்கள் உடல் குறித்து நீங்கள் கவலைப்பட்டால்தான், உங்களால் மற்றவர்களுக்கு உங்களது அனுதாபத்தை பகிர முடியும். உங்களுக்கு உங்களை முக்கியமாக வைத்து கொள்வதில் எந்த வித தவறும் இல்லை. சுயநலத்திற்கு, சுயபராமரிப்பிற்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது.எனவே, சங்கடமே படாமல் உங்களை நீங்களே காதலியுங்கள்.

இப்போதைய மனித வாழ்க்கை சுயநலம் மிகுந்ததாக மாறி விட்டது. எல்லா உறவுகளிலும் நம்பகத்தன்மை இழந்து விட்டோம். உறவுகளுக்குள் ஒற்றுமை இல்லை. பணம், பதவி, வசதிக்காக மனிதர்கள் போலித்தனங்களுடன் வாழ பழகி விட்டனர். இப்போதெல்லாம், நடிப்பது எளிதாகி விட்டது. உண்மையாக வாழ்வது சிரமமாகி விட்டது. சூழ்நிலைகள் வரும்போது, உடன் வாழ்பவர்களின் சுய ரூபங்களும் வெளிப்படுகிறது. அவர்களது போலி முக கவசங்கள் அவிழ்ந்து விழுந்து, கோர முகங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைத்து, சுக்குநுாறாக்கி விடுகின்றன.


வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள்

இப்படிப்பட்ட போலியான சமூகத்தில் ஏமாற்றம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. சிங்கம், புலி, பாம்பு, தேள் போல, விஷம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில், போராட வேண்டியிருக்கிறது. உண்மையற்ற ஒரு சமூகத்தில், உண்மையாக வாழ நினைக்கும் மனிதர்கள், துன்பங்களை துயரங்களை அவர்களை சார்ந்தவர்களாலேயே சந்திக்க வேண்டும். முதுகில் குத்தும் துரோகிகளின் உலகம் இது என்பதை மறுக்க முடியாது. 'இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியதை போல, 'வாழ்க்கை என்பது, அந்தந்த நேரத்து நியாயங்கள்' என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். நியாயங்களுக்கு அப்பாற்றப்பட்டது இந்த வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டு, இயன்றவரை உங்களுக்காக, உண்மையாக வாழ்ந்து விட்டு போங்கள்..ஏனெனில், மனித வாழ்க்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் அல்ல... நீர்க்குமிழி தான்... எப்போதும் உடைந்து, கரைந்து, கலந்து, காணாமல் போகலாம். வாழும் காலத்தில் நிம்மதியை தேடுங்கள். இசையை ரசியுங்கள். மழலைகளை பாருங்கள். இயற்கையை காதலியுங்கள். துன்பம் என்ற வானில், அவ்வப்போது தோன்றும் வெளிச்சக் கீற்றுகளாக மின்னல்கள் வருவதை போல, அவ்வப்போது இன்பங்கள் வாழ்வில், வந்து வந்து போகும். துயரமே நிரந்தரம் என்பதே நிதர்சனம். எனவே, வாழ கற்றுக்கொள்ளுங்கள்!.

Updated On: 26 Nov 2022 3:24 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?