/* */

31,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்.. ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்து

கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 31,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்க நாளை மத்திய அமைச்சர் கையெழுத்திடுகிறார்.

HIGHLIGHTS

31,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்.. ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்து
X

கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தீனதயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா திட்டத்தின் கீழ், 31,067 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்யப்பட்ட 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், 31,067 கிராமப்புற ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதுதில்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கையெழுத்திடுகிறார். இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே, தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவுறுத்தலின்படி, இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கிராம மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொழில் நிறுவனங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இளைஞர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிப்பதுடன், தமது நிறுவனம் மற்றும் தம்மைச் சார்ந்த நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தவேண்டும்.

அதாவது, இளைஞர்களை தேர்வு செய்தல், தேவையான பயிற்சிகளை அளித்தல், பணியில் அமர்த்துதல் ஆகியவற்றின் அடிப்படையில், வேலைவாய்ப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தேவைக்கேற்ப, திறன் படைத்தவர்களாக இளைஞர்களை மாற்றி வேலைவாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிந்த பணியாளர்களை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பையும் மத்திய அரசு வழங்குகிறது.

இதைத்தவிர, தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ், பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரடியாக இணைக்கவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், திறமைக்கேற்ற பணியை தேர்வு செய்து வழங்கவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுக்கான உத்தரவாதத்திலிருந்து விலக்கு, வங்கிக்கடன் தள்ளுபடி நடைமுறைக்கான கட்டணங்களில் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும். மத்திய கிராமப்புற அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் திறன்படைத்த இளைஞர்களை உருவாக்கி அவர்களை வேலைக்கு அமர்த்தும் இலக்கு அந்த நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அரசு செலவில் பயிற்சி பெறும் வாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்கிறது.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு ரூ. 10ஆயிரம் வீதமும், 6 மாததிற்கும் மேல் பணியாற்றுவோருக்கு மாதம் ரூ. 12 ஆயிரமும், குறைந்தப்பட்ச ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என இந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 27 March 2023 2:59 PM GMT

Related News