கொரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பூசி பணிகள்: தீவிரப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் அட்வைஸ்..!
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துங்கள் என, அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
HIGHLIGHTS
நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு தினமும் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால், உலக அளவில் கொரோனா நிலவரம் குறித்தும், இந்திய அளவில் பாதிப்பு மற்றும் இறப்பு நிலவரம், பரிசோதனை விவரம் ஆகியவை குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாவட்டங்களில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். கால நிர்ணயம் செய்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் கொரோனா உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. இதை கண்டறிய மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.