தொடரும் விமான பணிப்பெண்கள் மீதான அத்துமீறல்..! இன்னொரு சம்பவம்..!
விமானத்தில் பயணம் செய்யும்போது போதை ஆசாமிகள் விமான பெண் பணியாளர்களிடம் அத்துமீறும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
HIGHLIGHTS
பாங்காக்-ல் இருந்து மும்பை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பெண் விமான பணியாளரைத் துன்புறுத்தியதற்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்
இண்டிகோ 6இ-1052 பாங்காக்-மும்பை விமானத்தில் பணியாளர் ஒருவரைத் துன்புறுத்தியதற்காக ஸ்வீடிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ் காவலர்கள் அறிக்கையின்படி, அவர் கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனஸ்ம் (62) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளாஸ், விமானத்தில் குடிபோதையில் இருந்ததாகவும், உணவு வாங்குவதற்காக பணம் செலுத்தும் போது தகாத முறையில் பெண் பணியாளரைத் தொட்டதாகவும், அவர் மீது இண்டிகோ விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது.
மும்பையில் விமானம் தரையிறங்கியதும் கிளாஸ் எரிக்கை விமான ஊழியர்கள் காவலர்களிடம் ஒப்படைத்தனர். அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிளாஸ் எரிக்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன் நடவடிக்கை எடுக்க தேவையான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அதுகுறித்த எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கடந்த மூன்று மாதங்களில் அத்துமீறலில் ஈடுபட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட எட்டாவது விமானப் பயணி, கிளாஸ் எரிக் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 23 அன்று, துபாய்-மும்பை இண்டிகோ விமானத்தில் பயணித்த சக பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீது மது அருந்தி, துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.