சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கட்டுப்பாடு அதிரடி நீக்கம்...!
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இனிமேல் தர வேண்டியதில்லை என, கட்டுப்பாட்டை தேவசம்போர்டு அதிரடியாக நீக்கியுள்ளது.
HIGHLIGHTS
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவின் கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவியதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று குறைவு எதிரொலியாக பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் என்ற கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் முதல் நீக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
மேலும் ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு பக்தர்கள் இனிமேல் முன்பதிவு செய்யலாம் எனவும், இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.