/* */

"மரங்கள் குழந்தைகளை பிரசவிக்கின்றன..!" கவிதை இல்லீங்க..! நிஜம்..! படிங்க..!

அந்த பெண்ணுக்கு பிரசவ வலி. அறைக்கு வெளியே பதட்டமாக உறவினர்கள் காத்திருக்கிறார்கள். ஆண் குழந்தையா..? பெண் குழந்தையா..? திக்..திக்..மனதுடன்..!

HIGHLIGHTS

மரங்கள் குழந்தைகளை பிரசவிக்கின்றன..! கவிதை இல்லீங்க..! நிஜம்..! படிங்க..!
X

Village Piplantri-பெண் குழந்தைகளுக்கு நடப்பட்ட மரத்தை கொண்டாடும் சிறுமிகள்.

சற்று நேரத்தில், பிறந்த குழந்தையின் “குவா குவா” அழுகை சத்தம்.! உள்ளே இருந்து, வெளியே எட்டிப் பார்த்த ஒரு பெண் சொல்கிறாள். “பெண் குழந்தை பிறந்திருக்கிறது..”“ஆஹா..”* என்று முகம் மலர்கிறார்கள் வெளியே காத்திருந்த அத்தனை உறவினர்களும்...! அவ்வளவுதான் ! ஆரம்பித்து விட்டது கொண்டாட்டம் ! அந்தக் கிராமத்தில்...!

ஆம்... 111 மரங்களை நடும் விழா ஆரம்பமாகி விட்டது ! ஆச்சரியமாக இருக்கிறதா?ஒரு பெண் குழந்தை பிறந்ததை எந்த ஊரில் இப்படி உற்சாகத்துடன், ஊரோடு சேர்ந்து கொண்டாடுகிறார்கள்..?நமது இந்தியாவில்...! ராஜஸ்தான் மாநிலத்தில்...! பிபிலாந்திரி என்ற கிராமத்தில் தான் இந்த கொண்டாட்டம். ஆம். ஒரு பெண் குழந்தை பிறந்தால், உடனடியாக ஆரம்பமாகி விடும் இந்த “மரம் நடும் விழா”.


2006-ம் ஆண்டில் இருந்து இது நடந்துவருகிறது. சில காலங்களுக்கு முன் அந்த கிராமமும் நமது உசிலம்பட்டி போலத்தான் இருந்தது. கர்ப்பத்தில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கள்ளிப்பால் போல ஏதோ ஒரு பாலை கொடுத்து கதையை முடித்து விடுவார்கள். அதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் உடனே இறந்து விடும். அல்லஅல்ல ... சிசுக் கொலை செய்யப்பட்டு விடும். இதற்கெல்லாம் காரணம்...? வரதட்சணைக் கொடுமை; கல்யாண செலவு...!

(இந்தக் கொடுமையை விளக்கி நமது பாரதிராஜாவும் 'கருத்தம்மா' படத்தில் பெண் குழந்தைகள் எவ்வளவு அன்புக்குரியவர்கள் என்பதை ஓங்கி தலையில் குட்டி சொல்லியிருந்தார் )

அப்போது தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட முதல் அடியை எடுத்து வைத்தார், அந்த கிராமத்தின் தலைவர் ஷ்யாம் சுந்தர். கிராமத்து மக்களை கூட்டி தனது புதிய "மரம் நடும் திட்டம்" பற்றி எடுத்துக் கூறினார்.


ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும், அந்த ஊரில் உள்ள எல்லோரும் சேர்ந்து 111 மரக் கன்றுகளை நடவேண்டும். எல்லாமே பணம்(பலன்) தரும் வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள். இந்த மரங்களை அந்த கிராமத்து பெண்களே பராமரிக்க வேண்டும். அதற்கான சம்பளத்தை கிராம பஞ்சாயத்து கொடுக்கும். கொஞ்சம் கணக்கு போட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தை பதினெட்டு வயதை நெருங்கும் போது, இப்படி பராமரித்து வளர்க்கப்பட்ட அந்த 111 மரங்களும் எவ்வளவு பணம் கொடுக்கும் மரங்களாக மாறி இருக்கும்.

அப்புறம் என்ன..? கல்யாண செலவு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லையே? இது மட்டும் அல்ல. பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பஞ்சாயத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். பெற்றோர் தரப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். இந்த மொத்தப் பணத்தையும், பிறந்த குழந்தையின் பெயரில் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு விடுகிறார்கள். இதுவும் அந்தக் குழந்தைக்கு 18 அல்லது 20 வயதாகும்போது, அந்தக் குழந்தையின் படிப்பு செலவுக்கோ, கல்யாண செலவுக்கோ பயன்படுகிறது.


மொத்தத்தில், இப்போது அந்த ஊரே பச்சைப்பசேல் என்று மரங்களால் நிறைந்து இருக்கிறது. ஒரு காலத்தில் வேண்டாம் என்று வெறுக்கப்பட்ட பெண் குழந்தைகள், இன்று வீதி எங்கும் தேவதைகள் போல உலவி வருகிறார்கள். இந்த எண்ணம், அந்த கிராமத்தின் தலைவர் ஷ்யாம் சுந்தருக்கு எப்படி உதித்தது?

பல ஆண்டுகளுக்கு முன், அவருக்குப் பிறந்த பெண் குழந்தையும் சிசுக் கொலை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அவரால் அதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதுதான் அந்த கிராமத்தின் பழக்கமாக, அத்தனை ஆண்டு காலமாக இருந்து வந்தது. அதற்குப் பிறகுதான் இறந்து போன தனது மகள் நினைவாக இந்த 111 மரங்கள் திட்டத்தை செயல்படுத்த பெரும் முயற்சி எடுத்து போராடி, இன்று அதில் மகத்தான வெற்றியும் கண்டிருக்கிறார் ஷ்யாம் சுந்தர்.


ராஜஸ்தானில், அந்த கிராமத்தில் இன்று பல பெண்கள் உயிரோடு இருப்பதற்கு ஷ்யாம் சுந்தர் என்ற ஒரு ஆண் காரணமாக இருக்கிறார். அவரது இந்த திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் பிறந்தவுடன் இறந்து போன அவர் மகள். ஆம்... ஒரு பெண் தான் இருக்கிறாள்..!

Updated On: 12 Aug 2023 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!