21 ஆயிரம் கோடி நிதியுதவி: 10 கோடிக்கு மேலான விவசாய குடும்பங்கள் பயன்பெற்றன -பிரதமர் பெருமிதம்
வாக்கு வங்கி அரசியலை பற்றி நான் கவலைப்படவில்லை, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமே எனது குறிக்கோள் - பிரதமர் நரேந்திர மோடி
HIGHLIGHTS
சிம்லாவில் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்புதிட்டம் தொடர்பான மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
மத்தியில் பிஜேபி அரசு பொறுப்பேற்ற நாள் முதல், கடந்த எட்டு ஆண்டுகளாக ஏழை மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, அரசு செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். நாட்டில் அமைதி, வளம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வளிப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார்.
வாக்கு வங்கி அரசியலை பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமே தமது குறிக்கோளாகும் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின்கீழ், அடுத்த தவணைக்கான தொகையையும் விடுவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம், பத்து கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இந்த தொகுப்பு திட்டத்தின் மாநாட்டையொட்டி நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மாநிலங்களின் தலைநகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்று பேசினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.