/* */

பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து உருவாக்கப்பட்ட சீருடைகளையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

HIGHLIGHTS

பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
X

பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார். இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி சமையல் முறையின் இரட்டை அடுப்பு மாதிரியையும் நாட்டுக்கு அர்ப்பணித்த அவர் இதன் வணிக ரீதியான விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இன்று பிற்பகுதியில் எத்தனால் கலக்கும் திட்டத்தின் கீழ் 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 84 சில்லறை விற்பனை பெட்ரோல் நிலையங்களில் இ-20 எரிபொருளையும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் இயங்கும் வாகனங்களுடன் பசுமைப் போக்குவரத்து பேரணியை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது பசுமை எரிபொருள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.

துருக்கியிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த பின் நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே பிரதமர் உரையை தொடங்கினார். சாத்தியமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயார் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பம், திறமை, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றால் நிறைந்துள்ள நகரம் பெங்களூரு என்பதை எடுத்துரைத்த பிரதமர் இங்குள்ள அனைவரும் அந்த ஆற்றலை அனுபவமாக கொண்டிருக்கிறார்கள் என்றார். ஜி-20 செயல்திட்டத்தின் கீழ் இந்தியா எரிசக்தி வாரம் என்பது குறிப்பிடத்தக்க முதலாவது எரிசக்தி நிகழ்வாகும் என்று தெரிவித்த அவர், இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

21ம் நூற்றாண்டின் உலக எதிர்கால திசையை அமைப்பதில் எரிசக்தி துறையில் மிகப்பெரிய பங்களிப்பை பிரதமர் கோடிட்டுக் காட்டினார்."எரிசக்தி பரிமாற்றத்திற்கும், புதிய எரிசக்தி வளங்களை உருவாக்குவதற்கும் உலகில் வலுவாக குரலெழுப்பும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் எரிசக்தி துறையின் வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட இந்தியா தீர்மானத்தை நிறைவேற்றுகிறது" என்று அவர் கூறினார்.

வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஒன்றாக இந்தியா இருப்பதை அண்மையில் வெளியிடப்பட்ட ஐஎம்எஃப் அறிக்கை தெரிவிப்பதை சுட்டிக்காட்டிய திரு.மோடி பெருந்தொற்று மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் உலகளாவிய பிரகாச இடமாக இந்தியா தொடர்கிறது என்றார். வெளிநாட்டு சக்திகளின் தடைகளை மீறி தேசத்தை சக்திமிக்கதாக மாற்றுகின்ற உள்நாட்டு உறுதிப்பாட்டை அவர் பாராட்டினார்.

இதற்கான, பலவகை காரணங்களை குறிப்பிட்ட அவர் முதலாவதாக இருப்பது, நிலையான உறுதிமிக்க அரசாகும் என்றார். இரண்டாவது, நீடித்த சீர்திருத்தங்கள் மூன்றாவது, அடித்தள நிலையில் சமூக பொருளாதார அதிகாரமளித்தல். வங்கிக் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறை, கட்டணமில்லாத சுகாதார வசதிகள், கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் வகையில் பாதுகாப்பான துப்புரவு முறை, மின்சாரம், வீட்டு வசதி, குழாய் மூலம் குடிநீர் உள்ளிட்ட சமூக அடிப்படையில் கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பிரதமர் விவரித்தார். இதனால் பல பெரிய நாடுகளில் மக்கள் தொகையை விட அதிகமான மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர் கூறினார்.

6 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டதால் ஒவ்வொரு கிராமமும் இணைய வசதியை பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் பற்றிப் பேசிய பிரதமர் அகண்ட அலைவரிசையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 13 மடங்கும், இணையதள இணைப்புகளை பெற்றிருப்போர், எண்ணிக்கை 3 மடங்கும், அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டினார். உலகில் செல்பேசி உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று கூறிய பிரதமர், உலகில் முன்னேற விரும்பும் வகுப்பினரில் அதிக எண்ணிக்கையை அது கொண்டிருப்பதாகவும், தெரிவித்தார்.

வருங்காலத்தில் எரிசக்திக்கான தேவை அதிகரிப்பது குறித்துப் பேசிய அவர், உலகளாவிய எண்ணெயின் தேவையில் இந்தியாவின் பங்கு 5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகவும் எரிவாயுவின் தேவை 500 சதவீதம் அளவுக்கும், உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய எரிசக்தி துறையின் விரிவாக்கத்தால் முதலீடு மற்றும் ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.

எரிசக்தித் துறைக்கான நான்கு முக்கிய உத்திகள் பற்றி விவரித்த பிரதமர், முதலாவது உள்நாட்டில் எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், இரண்டு விநியோகத்தை பன்முகப்படுத்துதல், மூன்று உயிரி எரிபொருள், எத்தனால், சூரிய மின்சக்தி அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு போன்ற எரிசக்திகளை விரிவுப்படுத்துதல், நான்காவது மின்வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் மூலம், கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல்.

2030க்குள் நமது எரிசக்திக் கலவையை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க இயக்க மாதிரியில் நாம் பாடுபட்டு வருகிறோம் என்று பிரதமர் தெரிவித்தார். 'ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு' என்பதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்பை வழங்குவது தேவைப்படுகிறது. நகர்ப்புறங்களில் எரிவாயு விநியோகம் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2014ல் 900 என்றிருந்த அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களில் எண்ணிக்கை தற்போது 5000 மாக உயர்ந்துள்ளது என்றும், பிரமர் கூறினார். 2014ல் 14,000 கிலோமீட்டர் தொலைவு என்பதிலிருந்து குழாய் மூலம் எரிவாயு விநியோகம் 22,000 கிலோமீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும், அடுத்த 4 - 5 ஆண்டுகளில் இது 35,000 கிலோமீட்டராக விரிவடையும் என்று எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியக் குடிமக்கள் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களை வெகுவேகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்பது பற்றி பிரதமர் விவரித்தார். வீடுகள், கிராமங்கள், விமான நிலையங்கள், சூரிய மின்சக்தியில் இயங்குவதை உதாரணமாக எடுத்துரைத்த அவர், வேளாண் பணிகளும் சூரிய மின் சக்தியால் இயங்கும், பம்புசெட்டுகளைக் கொண்டு செயல்படுத்தப்படுவது பற்றியும், குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் 19 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். சூரிய சக்தியில் இயங்கும் சமையல் அடுப்பு இன்று அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பற்றி குறிப்பிட்ட இது புதிய பரிணாமத்தை கொண்டுவரும் என்றார். அடுத்த 2 - 3 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்த சூரிய சமையல் அடுப்புகள் பயன்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இது சமையல் அறையில் ஒரு புரட்சியை கொண்டுவரும் என்று கூறினார்.

இந்தியாவின் எரிசக்தி துறை தொடர்பான அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிந்து அவற்றின் ஈடுபாடு காட்டுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், உங்களின் முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான இடமாக இந்தியா உள்ளது என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வில் கர்நாடக ஆளுநர் திரு.தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை இணை அமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் அதிகரித்து வரும் சக்தியை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பிப்ரவரி,6 முதல் 8 வரை இந்தியா எரிசக்தி வாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி பரிமாற்றத்திற்கு பொறுப்பான நாட்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்க மரபு சார்ந்த மற்றும் மரபு சாராத எரிசக்தி தொழில் துறையில், அரசுகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்துக் கொண்டு வரும். உலகம் முழுவதிலுமிருந்து 30க்கும் அதிகமான அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இந்திய எரிசக்தியின் எதிர்காலம் பற்றிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, 500 உரையாளர்களும், 1000 கண்காட்சி ஏற்பாட்டாளர்களும், 30,000 பிரதிநிதிகளும் விவாதிப்பார்கள்.

Updated On: 6 Feb 2023 4:40 PM GMT

Related News