மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும் நாடாளுமன்றத் திருவிழா
நாடு முழுவதும் 748 மாவட்டங்களில் இருந்து 20,000 இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 1,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவை மாவட்டம், மாநிலம், மற்றும் தேசிய அளவில் நடத்துகிறது. நாடு முழுவதும் 748 மாவட்டங்களில் இருந்து 20,000 இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து இந்நிகழ்ச்சிக்கு 1,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், மாவட்ட அளவிலான இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்தது. இதில் 1,800 நாட்டு நலப்பணித் திட்டம்(என்எஸ்எஸ்) மற்றும் தேசிய இளைஞர் மைய மாணவர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி, வியக்கத்தகு இந்தியா, ஆயுஷ்மான் பாரத், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா; ஆரோக்கியமான இந்தியா என்ற தலைப்புகளில் நடந்தது.
மாவட்ட அளவில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான தேசிய இளைஞர் திருவிழாவில் பங்கேற்பர். தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 76 பேரும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தலா இருவரும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்பர்.
மொத்தம் 80 பேர் பங்கேற்கும் மாநில அளவிலான தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டை, ராதா நகரில் உள்ள எம்ஐடி வளாகத்தில் பிப்ரவரி 26ம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது.
மாநில அளவிலான நிகழ்ச்சி அனைவருடனும் அனைவருக்கும்,ஒரே பாரதம் உன்னத பாரதம், மேக் இன் இந்தியா, கேலோ இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா உட்பட 7 தலைப்புகளில் நடைபெறுகிறது.