இந்திய-வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்..!
இரு நாடுகள் இடையே கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் நடத்த வங்க தேச வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வந்தார்.
HIGHLIGHTS
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கூட்டு ஆலோசனைக் குழுவின் 7வது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.
இதையடுத்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ஜே.சி.சி கூட்டு ஆலோசனை ஆணையத்தின் 7-வது சுற்றில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மோமன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு நடைபெறும் கூட்டு ஆலோசனைக் குழுவின் நேரடி சந்திப்பு இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முந்தைய சந்திப்பு காணொலி வாயிலாக 2020 ல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கொரோனா பெருந்தொற்று, எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, இணைப்பு, எரிசக்தி, நீர் வளங்கள், வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் பிராந்திய மற்றும் பல தரப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் ஆலோசனை கூட்டம் மதிப்பாய்வு செய்யும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.