விளைப் பொருட்களின்றி சரியான விலையின்றி, பரிதவிக்கும் பஞ்சாப் விவசாயிகள்....
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்ட மசோதாவை வாபஸ் பெற வைத்த, பஞ்சாப் விவசாயிகள் இன்று பரிதவிக்கின்றனர்.
HIGHLIGHTS
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு தரமான விலை கிடைக்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பினை சுரண்டி பிழைக்கும் இடைத்தரகர்களை முற்றிலும் அகற்ற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு தேவையான மார்க்கெட்டிங் வசதி செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு புதிய விவசாய சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா நிறைவேறினால், இடைத்தரகர்கள் முற்றிலும் வீழ்ந்து விடுவார்கள். இதனால் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த இடைத்தரகர்கள் விவசாயிகளை துாண்டி விட்டு மத்திய அரசுக்கு எதிராக போராட வைத்தனர். இதில் வெளிநாட்டு சதியும் இருந்தது. மத்திய அரசு எவ்வளவோ முயற்சித்து விளக்கி சொல்லியும் விவசாயிகள் இடைத்தரகர்களின் பேச்சை தான் கேட்டனர். அரசின் பேச்சை கேட்க மறுத்தனர். இதன் விளைவு மத்திய அரசு புதிய விவசாய சட்ட மசோதாக்களை வாபஸ் பெற்றது.
தங்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டதை கொண்டாடிய பஞ்சாப் விவசாயிகள் இன்று ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். இந்த ரத்தக்கண்ணீர் வடிக்கும் படலம் தமிழகத்திலும் உள்ளது. தமிழகத்தின் நிலையை தனியே பார்க்கலாம்.
இப்போது பஞ்சாப் விவசாயிகள், தாங்கள் விளைவித்த குடைமிளகாய்களை, ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியாத அவல நிலையில் உள்ளனர். இதனால் குடைமிளகாய்களை தெருவில் கொட்டி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்திருந்த விவசாய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், விவசாயிகள் இது போன்ற ஒரு அவல நிலையை சந்திக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
புதிய மசோதாவில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, விதைப்பதற்கு முன்னதாகவே விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை மோடி அரசு விவசாயிகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால் இந்த விவசாயிகள், தற்காலிகமாக தங்களுக்கு கிடைத்த லாபங்களுக்காக அப்போது தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு இன்று அவதிப்படுகின்றனர். பெரும்பாலும் இந்தியா முழுவதும் சாதாரண மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. தங்களை, யார் ஏமாற்றுகிறார்கள், யார் உண்மையிலேயே உதவுகிறார்கள், என்பது கூட அறியாத நிலை இவர்களுடையது.
இன்று மாநிலம் முழுவதும் விளைந்த குடைமிளகாய்களை ரோட்டில் கொட்டி வருகின்றனர். குடைமிளகாய் மட்டுமல்ல... பல்வேறு விவசாய பொருட்களின் விலைகளும் மிகவும் குறைவாக இருப்பதால் பலத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக பஞ்சாப் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.