கவிழ்ந்தது ஆப்பிள் ஏற்றி வந்த லாரி; உதவிக்கு நீண்ட மனிதநேய கரங்கள்
பஞ்சாப்பில், ஆப்பிள் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் நஷ்டமடைந்தவருக்கு 9.12 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கினர் இருவர்.
HIGHLIGHTS
தமிழக கிராமங்களில் மட்டுமின்றி நகர்பகுதிகளிலும் ஒரு அவசர உதவி தேவையென்றால் பிரதிபலன் எதிர்பாராமல், உதவிக்கு வருபவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் அதிகமாக இருந்தது.
இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஒரு விபத்து நடந்தாலோ, செயின் பறிப்பு நடந்தாலோ கூட காப்பாற்றச் செல்லாமல், அந்த சம்பவ இடத்தில் இருந்து கொண்டு, 'செல்பி' எடுக்கும் பழக்கம், தற்போது அதிகரித்து வருகிறது.
இது, கலிகாலம் என்பதால் மனித தன்மையற்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர், 'விபத்தில் சிக்கியவர்களை மீட்கப்போகிறேன்' என்ற பெயரில் தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி, காயமடைந்து வலி, வேதனையுடன் மயக்கத்தில் இருப்பவர்களை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன், அவர்களிடம் இருக்கும், நகை, பணம், மொபைல் போன்ற விலை உயர்ந்த பொருட்களை அபகரித்து விடுகின்றனர். இதற்கென்றே சில தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ்கள் இருப்பது தான் நெஞ்சை பதற வைக்கும் தகவல்.
சில இடங்களில் கிராம மக்கள் கூட விபத்து நடந்த இடத்திற்கு வந்தால், கைக்கு ஏதாவது, பணம் கிடைக்குமா? என தேடி போலீசார் வரும் முன், அந்த பொருட்களை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி விடுவது வேதனையின் உச்சம்.
தற்போது இந்தியா முழுவதும் இந்த அவல நிலைதான் காணப்படுகிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டில் இத்தனை நன்றி கெட்டவர்கள் நிறைந்து கிடந்தும், எப்படி இன்னமும் மழை பெய்கிறது என்று யோசிக்கும் உள்ளங்களுக்கு, இயற்கையின் கருணை அதை விட பெரியது என்றுதான் சொல்ல வேண்டும்.
விபத்துக்குள்ளான லாரியில் இருந்து திருடப்பட்ட ஆப்பிள்களுக்கு, ரூ.9.12 லட்சம் இழப்பீடு வழங்கிய இரண்டு நல்ல உள்ளங்கள் பற்றிய தகவல்தான் இது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து லாரி ஒன்று ஆப்பிள்களை லோடு ஏற்றிக்கொண்டு பீஹார் நோக்கி புறப்பட்டது. இந்த லாரி பஞ்சாபில் அமிர்தசரஸ் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள பதேகர் சாஹிப் மாவட்டப் பகுதியில் செல்லும் போது நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதையடுத்து லாரியில் அட்டைப் பெட்டிகளில் இருந்த ஆப்பிள்களை, கிராம மக்களும் அவ்வழியே செல்வோரும் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில் பஞ்சாபின் பாட்டியாலா நகரைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங், மொகாலியை சேர்ந்த குர்பிரீத் சிங் ஆகிய இருவரும் உடனே போலீஸாரை அணுகி, பழங்கள் திருடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை தாங்கள் ஈடுசெய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்த்து ரூ.9.12 லட்சத்துக்கான காசோலையை ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோப்போரை சேர்ந்த லாரி உரிமையாளர் ஷாகித்திடம் வழங்கினர்.
இதுகுறித்து குர்பிரீத் சிங் கூறும்போது, 'விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு உதவுவதற்கு பதிலாக சிலர் ஆப்பிள் பெட்டிகளை திருடுவதில் மும்முரமாக இருந்தது வேதனை அளித்தது. பஞ்சாபில் நடந்த இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவே அதே பஞ்சாபில் இருந்து நல்ல செய்தியை மக்களுக்கு சொல்ல விரும்பினோம். அதனால் உதவினோம்', என்றார்.
லாரி உரிமையாளர் ஷாகித் கூறும்போது, 'பிறருக்கு உதவுவதில் பஞ்சாப் மக்கள் எப்போதும் பெயர் பெற்றவர்கள். இங்கு இதுபோல் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. பஞ்சாபில்தான் நான் படித்தேன். இங்குள்ள மக்கள் எப்போதும் உதவிசெய்ய முன் வருவார்கள் என்பதை நான் அறிவேன்,' என்றார். இதனிடையே ஆப்பிள் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.