ஆன்மீகத்தையும், தேசபக்தியையும் தட்டி எழுப்பிய சந்திரயான்-3
சந்திரயான் 3 நிலாவில் இறங்கி தேசபக்தியினை மட்டுமல்ல பெரும் ஆன்மீக எழுச்சியினையும், தேசபக்தியினையும் ஏற்படுத்தி விட்டது.
HIGHLIGHTS
சந்திரயான் 3-ன் செயல்பாடுகளை தேசமும் உலகமும் கவனமாக அவதானிக்கின்றது. இது நல்ல விஷயம். சந்திரயான் 3 ஏவப்படும் முன்பே சந்திரனின் ஸ்தலமான திருப்பதியில் அதன் மாதிரி வடிவம் வைத்து வணங்கப்பட்டது. இது ஒன்றும் ரகசியமல்ல, அங்கே வணங்கித்தான் வானுக்கு ஏவினார்கள்.
இப்போது வெற்றிகரமாக அந்த இலக்கினை தேசம் அடைந்த பின், நிலாவில் நாம் தரையிறங்கிய இடத்துக்கு "சிவசக்தி" என பெயரிட்டார் மோடி. இது தேசத்தின் அடிப்படை கலாசாரமான இந்துமத அடையாளம் என்பதில் தேசம் மகிழ்ந்தது.
இப்போது இஸ்ரோ தலைவர் அதாவது அந்த அமைப்பின் 10ம் தலைவர் சோம்நாத் தன் வேண்டுதல் நிறைவேற திருவனந்தபுரம் வெங்கனூர் ஆலயம் சென்றிருக்கின்றார். இந்த ஆலயத்தின் தெய்வம் பத்ரகாளி அம்மன் அந்த ஆலயத்தின் பெயர் "பவுர்ணமிகாவு ஆலயம்".
ஆம் இந்த ஆலயம் சந்திரன் தொடர்பானது. இங்கே பவுர்ணமியில் மட்டும்தான் ஆலயம் பக்தர்களுக்கு திறக்கப்படும் மற்றபடி சிறப்பு நாட்களில் மட்டும் பெரும் பரிகார பூஜைகளுடன் திறக்கப்படும். எல்லா நாளும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பவுர்ணமி எனும் முழுநிலவு நாளில் மட்டும் திறந்திருப்பதால் அது "பவுர்ணமிகாவு ஆலயம்".
51 அக்ஷர தேவதைகள் ஸ்தாபனம் செய்யப்பட்ட சக்திவாய்ந்த ஆலயம் இந்த ‘‘பவுர்ணமிகாவு ஆலயம்’’. அந்த ஆலயத்தில் தான் சோம்நாத் சிறப்பு வழிபாடுகளை செய்தார். சோம்நாத் ஒரு மலையாளி. இந்து எனும் வகையில் பக்திமிக்கவர், அவர் இந்த திட்டம் நிறைவேற சந்திரன் தொடர்பான இந்த பவுர்ணமிகாவு ஆலயத்துக்கு நேர்ச்சை செய்து நேற்று நிறைவேற்றினார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முத்துவேல் இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். அவர் யோக குரு ஜக்கிவாசுதேவின் சீடர். அவ்வகையில் தன் குருவினை சந்தித்து விண்கல மாதிரியினை கொடுத்து ஆசிபெற்றிருக்கின்றார். யோகபயிற்சி தனக்கு வழிகாட்டுவதாகவும் , தியான முறைகள் தனக்கு பல நன்மைகளை தருவதாகவும் அவர் சொல்லியிருக்கின்றார்.
இந்த திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் அதிகம். அவர்களும் பல இந்து ஆலயங்களில் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இது முழுக்க ஆன்மீக பூமி, சனாதான தர்மம் வாழ்வியலில் கலந்து நிற்கும் பூமி.
பொதுவாக இந்துக்களுக்கு படிப்பு எளிதாக வரும். உலகம் முழுக்க பெரிய பெரிய கம்பெனிகளில் இந்தியர்கள் உயர்ந்த பொறுப்பில் இருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது என எலான் மஸ்க் சொன்னது குறிப்பிடத்தக்கது. ஆம், இது அறிவார்தந்த மக்கள் இருக்கும் நாடு. காலம் காலமாக இந்துமதம் அவர்களை அப்படித்தான் உருவாக்கி வந்தது. அந்நிய ஆட்சியிலே சீரழிந்தோம். பின் மீண்டெழும்போது இட ஒதுக்கீடு அது இது என பலருக்கு பல வாய்ப்புகள் வலுகட்டாயமாக மறுக்கபட்டபோது தான் இந்தியர்கள் அயல்தேசம் சென்றார்கள். அமெரிக்கா ஐரோப்பாவில் பெரும் பொறுப்பில் இருக்கும இந்தியர்கள் அப்படித்தான் சென்றார்கள்.
இந்திய ராணுவம், இஸ்ரோ போன்றவைகளில் இட ஒதுக்கீடு இல்லை. தகுதியானவர் மட்டும் வரமுடியும் என்பதால் தான் இதோ மிக எளிதில் சாதிக்கின்றார்கள். ஆனால் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது தேசபக்தி. இந்த இஸ்ரோ பணியோ, டி.ஆர்.டி.ஓ எனும் பாதுகாப்பு கருவி உருவாக்கும் அமைப்போ சாதாரணம் அல்ல. சில மாதங்கள் இங்கு பணியாற்றினாலே சர்வதேச கம்பெனிகள் அள்ளிகொண்டுச் சென்றுவிடும்.
ராக்கெட் தயாரிப்பு, பாதுகாப்பு தயாரிப்பு தொழிலின் சம்பளமும் அதுகொடுக்கும் வருமானமும் அப்படியானது. ஆனால் இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செல்லவில்லை. கோடி என்ன பல்லாயிரம் கோடி கொடுத்தாலும் எம் நாடு, எம் மண் என இங்கே நிற்கின்றார்கள்
இந்த நாட்டுபற்றதைத்தான் நாம் பாராட்டுகின்றோம், இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டு கல்வி கற்று இந்த நாட்டுக்கே உழைப்போம் எனும் அந்த தேசபற்றுதான் அவர்களை இப்படி உழைக்கவைத்து தேசத்துக்கு பெருமை தேடி தந்திருக்கின்றது. அந்த உழைப்பை பாரத நாட்டின் தெய்வங்கள் ஆசீர்வதிக்கின்றன. அதனால் இந்நாட்டினை காக்கும் தெய்வங்களை தேடி ஓடுகின்றார்கள்
இப்படிப்பட்டவர்களால்தான் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது, இந்த அப்பழுக்கற்ற தேசபக்தர்கள்தான் இந்நாட்டின் வரங்கள். நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துக்கள், எங்கள் தெய்வ அருளுடன் இந்நாட்டிற்கே உழைப்போம், எந்த கோடிக்கும் விலைபோகமாட்டோம் எங்கள் அறிவு எங்கள் தெய்வம் கொடுத்தது, அதை இந்த நாட்டுக்கே கொடுப்போம்
எங்கள் தெய்வம் எங்களோடு இந்த நாட்டை நடத்தும் என நிற்கும் இவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
ஏன் பெரிய இடத்தில் இருப்போர் பக்தியாய் இருத்தல் வேண்டும். நல்வழிகாட்டல் வேண்டும் என்றால் விஞ்ஞானிகளே தெய்வத்தை வழிபடுகின்றார்கள் என்றால் கடவுள் உண்டு தெய்வத்தை வணங்கவேண்டும் கோவில் செல்லவேண்டும் எனும் நம்பிக்கை மாணவர் மத்தியில் வரும்.