/* */

குழந்தைகள் நடத்தை மாற்றத்தை முன்பே கண்டறிவது அவசியம்

மன நோயை குணப்படுத்தி விடலாம். ஆனால், செயற்கையாக மனநோய் வந்தால் அதனை சரி செய்வது மிகவும் கடினம்.

HIGHLIGHTS

குழந்தைகள் நடத்தை மாற்றத்தை முன்பே கண்டறிவது அவசியம்
X

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வளர் இளம் பருவம் என்பது (12 வயதில் இருந்து 18 வயது வரை) மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில் தான் மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளிலும் மாற்றம் ஏற்படும். மூளை பக்குவமடையும். ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும்.

பொதுவாக, பதின்பருவம் அல்லது வளர்இளம்பருவம் என்பது, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு காலகட்டமாக உள்ளது. இந்த வயதில் உள்ளவர்களிடம் அதிவேகமான வளர்ச்சி மாற்றங்கள் காணப்படும், அதுவரை குழந்தைப்பருவத்தில் பாதுகாப்பாக இருந்தவர்கள் இப்போது பெரியவர்கள் என்கிற பருவத்துக்குத் தாவியாக வேண்டும், அதை உறுதியாகப் பற்றிக் கொள்வதற்குள் அவர்கள் மனதில் ஆயிரம் குழப்பங்கள் உண்டாகும்.

தன்னை அறியும் பருவம் :

ஒருவர் பதின்பருவத்துக்குள் நுழையும்போதுதான், தன்னைப்பற்றிய ஓர் உணர்வு அவருக்குள் பதிகிறது, அவருக்குத் தன்னுடைய உடல்சார்ந்த ஒரு புதிய பிம்பம் உண்டாகிறது, பெற்றோர், சமவயதில் உள்ளோர், மற்ற அன்புக்குரியவர்களுடன் அவருடைய உறவு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில்தான் ஒருவருடைய ஆளுமையின் பெரும்பகுதி உருவாகிறது. பதின்பருவத்தினர் அவர்கள் தீர்மானமெடுக்கச் சிரமப்படுகிறார்கள், நேர மேலாண்மை செய்ய இயலாமல் தவிக்கிறார்கள், இலக்குகளைத் தீர்மானிக்கத் தடுமாறுகிறார்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் திகைக்கிறார்கள்.

ஆனால், இந்த மாற்றம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான மாற்றமாக இருக்காது. சிலருக்கு ஹார்மோன் சுரப்பது தாமதமாகும். சிலருக்கு வயதுக்கு மீறிய மாற்றம் இருக்கும்.

பொதுவான பிரச்னைகள் :

பதின்பருவத்தினரிடம் பொதுவாகக் காணப்படும் சில பிரச்னைகள்: போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் கவலைகள், தூக்கம் தொடர்பான கவலைகள், ஆரோக்கியமற்ற தூங்கும் பழக்கங்கள், தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் ஆகியவை. பதின்பருவத்தில் உள்ள ஒருவரிடம் இந்தப் பிரச்னைகள் இருந்தால், அதைப்பற்றிப் பதறவேண்டியதில்லை. அதேசமயம், அந்தப் பிரச்னைகள் பெரிதாகி, அவர்களுடைய பள்ளி அல்லது கல்லூரி செயல்பாடுகளைப் பாதிக்கத் தொடங்கினால், அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து உதவிபெறவேண்டியிருக்கலாம்

கட்டுப்பாடற்ற நிலை :

பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளை நாம் சரிவர கண்காணிப்பதில்லை. அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. தனது பெற்றோர்களிடம் தனக்கு கிடைக்காத சுதந்திரம், தனது குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் உள்ளார்கள்.

இவை மனரீதியான மாற்றங்கள், பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். இந்த நேரத்தில்தான் தன்னிச்சையான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இளம்கன்று பயமறியாது என்பதற்கேற்ப பின்விளைவுகளை யோசிக்காமல், எதையும் துணிந்து செய்ய துணிவார்கள். பெரியவர்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள்.

இது போன்ற சமயத்தில் தான் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக வழிநடத்த வேண்டும். இந்த வயதில் ஏற்படும் பழக்கங்கள்தான் வளர்ந்த பின்பும் தொடரும். அவ்வப்போது பெற்றோர் கண்டித்தால் பெரும்பாலானவர்கள் மாறிவிடுவார்கள்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை :

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்ததால், வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தனி அக்கறை காட்டினர். பெரியவர்களின் கண்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகளால், சிறியவர்கள் கட்டுபாட்டுடன் இருந்தனர்.

குறிப்பாக வீடுகளில் ஆபாசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. அறிவியல் முன்னேற்றத்தால் பாலியல் விஷயங்களை உள்ளங்கையில் உள்ள செல்போன் மூலம் நொடிப்பொழுதில் பெற முடியும். தங்கள் வயதுக்கு தேவையில்லாத தகவல்களையும் செல்போனில் சிறியவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

தவறான நடத்தை என்பது எந்த ஒரு குழந்தையிடம் உடனடியாக வராது. அவர்களது சக வயது நண்பர்களிடமிருந்து ஒருசில பழக்கங்கள் வந்திருக்கலாம். அந்த பழக்கங்கள் ஓரிரு மாதங்களாகவே தொடர்ந்து இருக்கும். அதனை நாம் தான் கண்டறிய வேண்டும். பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் இருப்பது, நடத்தையில் மாற்றம், தனிமையை விரும்புவது, அடிக்கடி கோபப்படுவது போன்றவற்றை பெற்றோர் கண்காணித்து, அதற்கான காரணத்தை தெரிந்து அவர்களை மாற்ற வேண்டும்.

மாற்றம் காண பெற்றோர் முயல்தல் :

தற்போது குற்றச்சம்பவங்களில் சிறார்கள் ஈடுபட போதைப்பழக்கம் முக்கியமானதாக உள்ளது. போதைப்பொருள் மூளையை சமநிலையில் வைக்காது. அதனால்தான் போதையில் இருப்பவர்களிடம் கட்டுப்பாடுகள் இருக்காது.

வளர்இளம் பருவம், விடலை பருவத்தில் சமவயது நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலை இருக்கும். மற்றவர்கள், தீய வழியை காட்டினாலும், அதனைப் பற்றிய விளைவுகளை எண்ணாமல், அதில் பயணிக்க தயங்கமாட்டார்கள்.

இதை பெற்றோர்தான் கவனித்து, திசை திருப்ப வேண்டும். தண்டனைகள் வீட்டில் கடுமையாக்கப்பட்டால், வெளியுலகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடாமலும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கலாம். ஒத்த பிள்ளை என செல்லம் கொடுத்து வளர்த்து பின்னால் வருத்தப்பட வேண்டாம். மரங்களை கூட அது கிளை பரப்பி வளர கவாத்து செய்கிறோம். அதே போலே குழந்தைகள் நல்லபடியாக வளர, அவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்க கண்டிப்பு என்பது கட்டாயத்தேவை என பெற்றோர்கள் உணரவேண்டும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாலியல் தொடர்பான குற்றங்கள் மட்டுமின்றி எந்த குற்றமானாலும் தண்டனை கடுமையாக இருக்கும். நம் நாட்டிலும் அதுபோல தண்டனைகளை கடுமையாக்கினால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. இளம்வயதுக்காரர்களிடம் சொல்லி புரிய வைப்பது கடினம். எனவே விளைவுகளையும் தண்டனைகளைம் கூறி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

ஆன்லைன் வகுப்பு :

கொரோனா ஊரடங்கின்போது, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் பயன்படுத்தினர். ஆனால், கொரோனா காலகட்டம் முடிந்த பின்னரும் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு தேவையில்லாமல் இணைய வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் அதுவும் தவறு செய்ய தூண்டுதலாகிறது.

பெற்றோரின் ஆளுமையும் பதின்பருவத்தினரைப் பாதிக்கலாம். ஆகவே, பெற்றோர் அவர்களுக்கு லட்சிய பிம்பமாக அமைதல் மிகவும் முக்கியம். அதாவது, பெற்றோர் தங்களது உணர்வுகளை அடையாளம் காணவேண்டும், கையாளவேண்டும், உறுதியாகப் பேசவேண்டும், சரியான முறையில் தகவல் தொடர்புகளை நிகழ்த்தவேண்டும்.

• பெற்றோர் பதின்பருவத்தினருடன் பேசும்போது, திறந்த மனத்துடன் இருக்கவேண்டும், தொடர்ந்து பேசிவர வேண்டும், அவர்களுடைய அணுகுமுறை ஆதரவாகவும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் அமையவேண்டும்.

• அவர்களுக்கான கட்டுப்பாடு குறித்த தீர்மானம் எடுக்குமுன், அவர்களுடைய சம்மதத்தைப் பெறவேண்டும்.

• ஓய்வு நடவடிக்கைகளின் மூலம் குடும்பத்துக்கான நேரத்தைச் செலவிடவேண்டும்.

• பதின்பருவத்தினர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என ஊக்கப்படுத்தவேண்டும், அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். இதன்மூலம், பதின்பருவத்தினர் தங்களுக்காகத் தாங்களே சிந்திக்கப் பழகுவார்கள்.

ஒப்பீடுகளைத் தவிர்த்தல்

• பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்துவமானவர், அவர் மற்றவர்களைப்போல் வளர்வதில்லை, அதே வேகத்தில் முன்னேறுவதில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வளர்இளம்பருவத்தினர் இந்த முக்கியமான வாழ்க்கை நிலையின் செயல்முறையில் தான் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, அதன் பலன்களில் அல்ல.

மனநோய்களால் குற்றங்கள் ஏற்படுவது மிக குறைவு. 18 வயதுக்கு உள்ளானவர்களிடையே ஏற்படும் நடத்தை கோளாறுகளால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கட்டாயமாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கான மனநல மருத்துவத்துறை செயல்பட்டு வருகிறது. அதிக அளவு மன அழுத்தத்துக்கு உள்ளாவதால், குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதனை அழகாக செய்தால் குடும்பம் இனிக்கும்.

Updated On: 18 May 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா