தொற்று பரவல் : தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு
தமிழகத்தில் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
தமிழகத்தில், கடந்த டிசம்பர் மாதம் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்தன. எனினும், கொரோனா பரவல் தலைதூக்கியதால், அத்தேர்வுகள், ஜனவரி 20-ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று, தமிழக அரசு அப்போது அறிவித்தது. எனினும், தற்போது தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, பல்கலைக்கழகத் தேர்வுகளை மீண்டும் ஒத்திவைப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 20-ம் தேதிக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும், மறுதேதி குறிபிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே நேரம், எழுத்துத்தேர்வுகள் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. செய்முறைத்தேர்வுகள் நடைபெறும். எனவே, மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி மேலும் கூறினார்.